

மேற்குவங்கத்தில் புனித நீராடல் நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ஒரு பெண் உட்பட 6 பக்தர்கள் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.மேற்குவங்க மாநிலம் கங்காசாகர் அருகே சாகர் தீவு உள்ளது. மகர சங்கராந்தியை ஒட்டி அங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் புனித நீராடுவது வழக்கம்.
இந்த ஆண்டு வழக்கம்போல பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கடந்த 2 நாட்களில் சுமார் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கங்கா சாகர் பகுதியில் புனித நீராடினர்.
சாகர் தீவு பகுதியில் நேற்று புனித நீராடிய பக்தர்கள் மாலையில் அங்கிருந்து படகுகள் மூலம் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். கொல்கத்தா செல்லும் படகில் ஏற நூற்றுக்கணக்கான பக்தர்கள் முண்டியடித்தனர்.
அப்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி ஒரு பெண் உட்பட 6 பக்தர்கள் உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.