Published : 14 Feb 2017 09:01 AM
Last Updated : 14 Feb 2017 09:01 AM

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகாத நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப் படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்வது தொடர்பாக 13-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை பெற்றுக்கொண்ட போதிலும் அவர் நேரில் ஆஜராகவில்லை. அவர் சார்பாக வேறு யாரும் ஆஜராகவில்லை. இதற்கான காரணம் தெரியவில்லை.

அதேநேரம் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என அவர் மறுக்கவும் இல்லை. எனவே, அவர் நேரில் ஆஜராக மேலும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில், இந்த வழக்கு மீதான விசாரணையை மார்ச் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படு கிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்கி வாதிடும்போது, “நேரில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சனம் செய்து நீதிபதி கர்ணன் ஏற் கெனவே பதிவாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அத்துடன் உத்தரவைப் பின்பற்றி நேரில் ஆஜராகவும் இல்லை. எனவே அவர் மீது உடனடியாக அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும்” என்றார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ். கர்ணன், கடந்த ஆண்டு பிப்ரவரியில் கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். இது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு நீதிபதி கர்ணனே தடைவிதித்துக் கொண்டார்.

இந்தப் பிரச்சினை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும் கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு அவர் மாற்றப்பட்டார்.

இந்தப் பிரச்சினையை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண் டது. இவ்வழக்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் அமர்வு முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, உங்கள் (கர்ணன்) மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு வரும் 13-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x