Published : 21 Oct 2014 10:59 AM
Last Updated : 21 Oct 2014 10:59 AM

ஆந்திர பட்டாசு ஆலை விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு

ஆந்திராவில் முறைகேடாக இயங்கிவந்த பட்டாசு தொழிற்சாலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. படுகாயங்களுடன் காகிநாடா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 பேர் இன்று காலை இறந்தனர்.

ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், கொத்தபல்லி மண்டலம் பாகதிப்ப கிராமத்தில் அனுமதியின்றி பட்டாசு தொழிற்சாலை இயங்கி வந்தது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இதில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவும் பகலுமாக பணியாற்றி வந்தனர். சிறுவர்கள் முதல் பெண்கள், ஆண்கள் என கொத்தபல்லி மண்டலத்தை சேர்ந்த பலர் இங்கு பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை மதியம் சுமார் 3 மணியளவில் இந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பயங்கர வெடி சத்தத்துடன் தீ 40 அடிக்கும் மேல் கொழுந்து விட்டு எரிந்தது. வெடி சத்தம் கேட்டு கிராமத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர்.

மேலும் போலீஸ், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டிருந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இந்நிலையில் பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்களில் 8 பேர் பெண்கள்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். இது தவிர காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை வழங்கும்படியும், விபத்து குறித்து விசாரணை நடத்தவும் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x