மகாராஷ்டிர முதல்வர் பதவியேற்பு விழா: சிவசேனா புறக்கணிப்பு

மகாராஷ்டிர முதல்வர் பதவியேற்பு விழா: சிவசேனா புறக்கணிப்பு
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக முதல் முறையாக ஆட்சியமைக்கிறது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இன்று பதவியேற்கிறார். ஆனால், இந்த பதவியேற்பு விழாவை முழுமையாக புறக்கணிப்பதாக சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் மாநிலத்தில் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜக, முதன்முறையாக அங்கு ஆட்சியமைக்கிறது. அக் கட்சியின் மாநிலத் தலைவரான 44 வயதுள்ள தேவேந்திர பட்னா விஸ் முதல்வராக பதவியேற்கிறார்.

மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் சி. வித்யாசாகர் ராவ், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பட்னாவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கவுள்ளார்.

இந்நிலையில், பதவியேற்பு விழாவை புறக்கணிப்பதாக சிவசேனா கட்சி அதன் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் அறிவித்துள்ளது.

சிவ சேனா கட்சி செயலர் விநாயக் ரவுத் கூறுகையில், "சிவசேனா கட்சிக்கு உரிய மரியாதையை பாஜக அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் அக்கட்சியின் பதவியேற்பு விழாவில் ஏன் பங்கேற்க வேண்டும் என சிவசேனா தொண்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனவே, பதவியேற்பு விழாவை சிவசேனா முழுமையாக புறக்கணிக்கிறது. பாஜகவுடனான 25 ஆண்டு கால நட்பு இனிமேல் சரி செய்ய முடியாத அளவுக்கு சேதமடைந்துவிட்டது" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in