Published : 10 Feb 2015 12:54 PM
Last Updated : 10 Feb 2015 12:54 PM

ஆம் ஆத்மியின் வெற்றி நரேந்திர மோடியின் தோல்வி: அன்னா ஹசாரே

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியைப் பெற்று வருவதை அடுத்து ஆம் ஆத்மியின் வெற்றி நரேந்திர மோடியின் தோல்வி என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

“இது நரேந்திர மோடியின் தோல்வி. பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்ததற்கு கிரண் பேடியை மட்டும் குறைகூறக்கூடாது. பிரதமர் மோடியின் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்.

அர்விந்த் (கேஜ்ரிவால்) அரசை எப்படி நடத்த வேண்டும் என்பதை அறிவார். காரக்பூர் ஐஐடி பட்டம் வென்றவர். மிகவும் திறமைசாலி, மற்றும் புத்திசாலி. நான் யார் அவருக்கு அறிவுரை வழங்க?” என்று கூறிய அன்னா ஹசாரே, கேஜ்ரிவாலுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நில அபகரிப்பு தொடர்பாக அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் குறித்து அன்னா ஹசாரே பாஜக-வை சாடும் போது, “என்ன அவசரச்சட்டம் அது? வளமான வேளாண் நிலங்களை அபகரித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுப்பது என்ன மாதிரியான அவசரச் சட்டம்? பாஜக-வின் அனைத்து வாக்குறுதிகளும் ஒன்றுமில்லை என்பது நிரூபணமாகியுள்ளது.

கேஜ்ரிவால் ஊழலுக்கு எதிராக இந்தியா என்ற எதிர்ப்பு இயக்கத்தில் கலந்து கொண்ட பிறகே புகழடைந்தார். அதனால்தான் அவருக்கு இப்போது இவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது. ஆகவே, முன்பு செய்த தவறுகளை கேஜ்ரிவால் செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.” என்றார் அன்னா ஹசாரே

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x