நீதிபதி கங்குலியை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நீதிபதி கங்குலியை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Published on

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அசோக் குமார் கங்குலியை மேற்குவங்க மனித உரிமை ஆணைய தலைவர் பதவியிலிருந்து நீக்க குடியரசுத் தலை வருக்கு பரிந்துரை செய்ய மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து, இதுதொடர் பான பரிந்துறையை மத்திய அரசு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைக்கும். அவரது ஒப்புதல் கிடைத்த பிறகு கங்குலியின் பதவியைப் பறிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கும். மேலும், கங்குலி மீது வழக்கு தொடுப்பதற்கான நடவடிக்கை தொடங்கும் என்று அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாகன்வதி தெரிவித்துள்ளார்.

அவகாசம் தேவை

இதற்கிடையே, தனது பதவியை ராஜிநாமா செய்வது குறித்து இன்னும் முடிவு எடுக்க வில்லை என ஏ.கே. கங்குலி வியாழக்கிழமை தெரிவித்தார். அவர் கூறுகையில், “மத்திய அமைச்சரவை முடிவு குறித்து இப்போது கருத்து தெரிவிக்க முடியாது. எனக்கு சிறிது அவ காசம் தேவை” என்றார் அவர்.

கடந்த 2012 டிசம்பர் மாதம் நீதிபதி கங்குலியிடம் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றிய போது, அவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் வழக்கறிஞர் ஒருவர் சமீபத்தில் புகார் கூறினார்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் அடங்கிய குழு, இந்த குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது. மனித உரிமை ஆணைய தலைவர் பதவியை கங்குலி ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in