Published : 05 Mar 2017 10:56 AM
Last Updated : 05 Mar 2017 10:56 AM
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் சிறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாரணாசி, ஜன்பூர் பகுதிகளில் பிரதமர் மோடி நேற்று பிரச்சாரம் செய்தார். ஜன்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
சில கட்சிகளின் தலைவர்கள் அரசியல் ஆதாயத்துக்காக ராணுவ நடவடிக்கைகளை குறைகூறி வருகின்றனர். நாட்டின் பாதுகாப்பை கருதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் நடத்தப்பட்டது. அதை சிலர் விமர்சனம் செய்தனர்.
இதேபோல கடந்த 40 ஆண்டுகளாக ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டம் குறித்து பேசி வரும் கட்சிகள் தங்கள் ஆட்சியின்போது எதுவுமே செய்யவில்லை. மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தவுடன் ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்துக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்த 3 கட்சிகளுமே ஊழலில் திளைத்து வருகின்றன. அதனால்தான் பணமதிப்பு நீக்கத்தை எதிர்க்கின்றன.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்தால் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் சிறு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாரணாசி நகர சாலைகள், வீதிகளில் பிரதமர் மோடி காரில் ஊர்வலமாகச் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். முன்னதாக காசி விஸ்வநாதர், கால பைரவர் கோயில்களில் அவர் வழி பாடு நடத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT