Last Updated : 02 May, 2017 01:04 PM

 

Published : 02 May 2017 01:04 PM
Last Updated : 02 May 2017 01:04 PM

குஜராத் பாஜக எம்.பி. தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாகக் கூறிய பெண் கைது

பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜோடித்து, ரூ.5 கோடி கேட்டு மிரட்டுவதாக ஒரு பெண் மீது பாஜக எம்.பி. குற்றம்சாட்டிய நிலையில் டெல்லி போலீஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ளனர்.

காஸியாபாத்தில் உள்ள அவரின் வீட்டில், அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் வல்சாத் மக்களவை தொகுதி உறுப்பினர் கே.சி.படேல் (67). இவர் டெல்லி போலீஸில் புகார் கொடுத்திருந்தார். அதில் “ஒரு பெண் என்னிடம் உதவி கேட்டு வந்தார். பின்னர் டெல்லியை அடுத்த காசியாபாத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்தார். அங்கு எனக்கு குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்துள்ளார். நான் மயங்கியதும் என்னை ஆபாசமாக படம் எடுத்துள்ளார்.

பின்னர் நான் அவரை பலாத்காரம் செய்து விட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் தன்னிடம் இருப்பதாகவும், ரூ.5 கோடி கொடுக்காவிட்டால் அவற்றை இணையதளத்தில் வெளியிடப் போவதாகவும் அந்தப் பெண் மிரட்டுகிறார்” என கூறியுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில், அந்தப் பெண் மீது (மிரட்டி பணம் பறித்தல்) வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து டெல்லி போலீஸார் கூறும்போது, “பிரபல அரசியல்வாதிகளை அணுகி உதவி கேட்பதும் பின்னர் அவர்களை தனது வலையில் சிக்க வைத்துவிட்டு மிரட்டுவதும் அந்தப் பெண்ணின் வழக்கமாக உள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு கூட இந்தப் பெண் ஒரு எம்.பி. மீது இதுபோல பொய் புகார் கொடுத்தார்” என்றனர்.

இதனிடையே, “மார்ச் 3-ம் தேதி கே.சி.படேல் அவரது வீட்டில் (அரசு) வைத்து என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார்” என அந்தப் பெண் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சர்ச்சைக்குள்ளாகிய அந்தப் பெண் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x