Published : 18 Feb 2017 10:06 AM
Last Updated : 18 Feb 2017 10:06 AM
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. 3-ம் கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இதில் மத்திய லக்னோ சட்டப்பேரவைத் தொகுதியிலும் வாக்குப் பதிவு நடக்கிறது.
இந்தத் தொகுதி வாக்காளர்தான் முன்னாள் பிரதமர் வாஜ்பாய். அவருடைய வாக்காளர் எண் 141. வாக்காளர் அடையாள அட்டை எண் XGF0929877 ஆனால், உடல்நலக் குறைவால் அவரால் இந்தத் தேர்தலிலும் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது.
வாஜ்பாய்க்கு தற்போது 92 வயதாகிறது. மத்தியில் காங்கிரஸ் அல்லாத பிரதமர் 5 ஆண்டு காலம் ஆட்சி நடத்திய பெருமைக்குச் சொந்தக்காரர் வாஜ்பாய். லக்னோ நாடாளுமன்ற தொகுதியில் 1991, 1996, 1998, 1999, 2004-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்றவர். கடந்த 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில்தான் கடைசியாக வாஜ்பாய் வாக்களித்தார். அதன்பின், 2007, 2012-ல் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் 2009, 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் அவரால் வாக்களிக்க முடியவில்லை என்று அவரது நெருங்கிய உதவியாளர் சிவ்குமார் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதுகுறித்து மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி கூறும்போது, ‘‘பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாஜ்பாயால் வாக்களிக்க முடியா விட்டாலும், அவரது ஆசிர்வாதம் எப்போதும் கட்சிக்கு உள்ளது. அதன்மூலம் இந்தத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT