Last Updated : 19 Oct, 2014 11:36 AM

 

Published : 19 Oct 2014 11:36 AM
Last Updated : 19 Oct 2014 11:36 AM

வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல்: முக்கிய நகரங்களில் ‘ஹெல்ப்லைன்’ வசதி

வடகிழக்கு மாநில மக்களுக்காக நாட்டின் முக்கிய நகரங்களில் மத்திய அரசு ஹெல்ப்லைன் வசதி அமைக்க உள்ளது.

டெல்லியை அடுத்து ஹரியாணா எல்லையில் அமைந்துள்ள குர்கானில் நாகாலாந்து மாநில இளைஞர்கள் 3 பேர் உள்ளூர் கும்பலால் கடந்த புதன்கிழமை இரவு தாக்கப்பட்டனர். இந்நிலையில் குர்கானில் சட்டம் ஒழுங்கு நிலவரத்தை ஆய்வு செய்வதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று சென்றார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “குர்கா னில் வசிக்கும் வடகிழக்கு மாநில மக்களுக்கென பிரத்யேக ஹெல்ப் லைன் வசதி ஏற்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளேன். இனவெறி தாக்குதல் சம்பவங்களை தடுப் பதற்கு இந்த ஹெல்ப்லைன் வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்குமானால், நாட்டில் வடகிழக்கு மாநில மக்கள் வசிக்கும் அனைத்து முக்கிய நகரங்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.

தாக்குதல் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளேன். இதுபோன்ற சம்பவங்களை மீண்டும் அனுமதிக்க கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

நாட்டின் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் பாதிக்க அனுமதிக்க மாட்டோம். நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக முக்கிய நகரங்களில் வசிக்கும் வடகிழக்கு மாநில மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய கடந்த பிப்ரவரியில் எம்.பி. பெஸ்பரூவா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு விரைவில் அமல்படுத்தும்.

குர்கானில் சமீபத்திய சம்பவம் தொடர்பாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் போலீஸாரின் விரைவான மற்றும் சரியான நடவடிக்கை எனது அமைச்சகத்துக்கும் வடகிழக்கு மாநில மக்களுக்கும் திருப்தி அளித்துள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x