Published : 15 Jun 2016 07:25 AM
Last Updated : 15 Jun 2016 07:25 AM
ஜம்மு காஷ்மீரில் மகா கும்பமேளா விழாவையொட்டி நேற்று 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்துக்கள் திரண்டனர்.
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம், சைடிபோரா என்ற கிராமத்தில் ஜீலம் நதியில் சிந்து நதியின் சிற்றாறு கலக்கிறது. இந்த நதிகள் சங்கமிக்கும் பகுதி, காஷ்மீர் இந்துக்களின் புனித தலமாக கருதப்படுகிறது. இங்கு 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை அர்த்த கும்பமேளாவும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளாவும் கொண் டாடப்படுகிறது. கும்பமேளா நாளில் நதிச் சங்கமத்தில் புனித நீராடி, அங்கு சிறிய தீவுப்பகுதியில் உள்ள சிவலிங்கத்தை வழிபடுவது பக்தர்களின் வழக்கம்.
இந்நிலையில் 12 ஆண்டு களுக்கு பிறகு இங்கு மகா கும்பமேளா நேற்று முன்தினம் தொடங்கி நேற்று மாலை வரை நடைபெற்றது. இதையொட்டி 12 ஆயிரத்துக்கு மேற்பட்ட இந்துக்கள் நேற்று புனித நீராடினர். இவர்களில் பெரும்பாலானோர் காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்த பண்டிட்கள் ஆவர்.
1990-களில் காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் வெளியேறத் தொடங்கிய பிறகு, அவர்கள் அதிக அளவில் பங்கேற்றது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT