அரபிக் கடலில் அதிகாலை விபத்து: படகு மீது சரக்கு கப்பல் மோதி 3 மீனவர் பலி - 11 பேர் படுகாயம்

அரபிக் கடலில் அதிகாலை விபத்து: படகு மீது சரக்கு கப்பல் மோதி 3 மீனவர் பலி - 11 பேர் படுகாயம்
Updated on
1 min read

கொச்சி கடல் பகுதியில் அதிகாலை படகு மீது சரக்கு கப்பல் மோதியதில், 3 மீனவர்கள் பலியாயினர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்தனர்.

கொச்சி பகுதி மீனவர்கள் 14 பேர் அரபிக் கடலில் மீன் பிடிக்க ‘கார்மல் மாதா’ என்ற படகில் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு 20 கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கம் சென்ற சரக்கு கப்பல் ஒன்று, படகு மீது மோதியது.

இதில் படகு நொறுங்கி மீனவர்கள் கடலில் மூழ்கினர். இதுகுறித்து கடலோர போலீஸார் கூறும்போது, ‘‘மீனவர்கள் சென்ற படகு காணவில்லை என்று தகவல் வந்தது. அவர்களைத் தேடிய போது 3 மீனவர்களின் உடல்களை போலீஸார் கைப்பற்றினர். மேலும் காயத்துடன் இருந்த 11 பேரை மீட்டனர். அவர்களில் 2 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. அவர்கள் உடனடியாக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்’’ என்றனர்.

விசாரணையில் பனாமாவில் இருந்து அந்தக் கப்பல் சென்று கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. மேலும், கப்பல் செல்லும் கடல் பகுதியில் படகில் மீனவர்கள் மீன் பிடிக்கவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கப்பல் வழிமாறி சென்றது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து கப்பல் படை மற்றும் கடலோர போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து ஏற்படுத்திய பனாமா கப்பல் கொச்சிக்கு கொண்டு வரப் பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது என்று போலீஸ் ஆணை யர் எம்.பி.தினேஷ் நேற்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in