Published : 24 Jun 2016 08:36 AM
Last Updated : 24 Jun 2016 08:36 AM
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
கேரளாவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியிடம் இருந்து மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. ஈழவா மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக ஒரு இடத்தில் (நேமம் தொகுதியில்) மட்டும் வெற்றி பெற்று முதல் முறையாக கேரளாவில் தனது கணக்கை தொடங்கியது. பாஜக சார்பில் அதன் மூத்த தலைவர் ஓ.ராஜகோபால் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், கேரள சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்தும், வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்குள் கேரளாவில் பாஜக.வை பலப்படுத்துவது குறித்தும் திருவனந்தபுரத்தில் நேற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்துக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமை வகித்தார். மேலும் பாரத் தர்மா ஜனசேனா தலைவர் துஷார் வேலப்பள்ளி, ஜனாதிபத்திய ராஷ்டிரிய சபா தலைவர் சி.கே.ஜானு, கேரள காங்கிரஸ் (தாமஸ்) பி.சி.தாமஸ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அமித் ஷா பேசும் போது, ‘‘கேரளாவில் தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவைப் பெற தேஜகூ தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் வாக்குகளை அதிகரிக்க செய்து தேஜகூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற செய்ய வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள், அதிக இடங்களில் வெற்றி பெற சிறப்பு செயல் திட்டத்தை வகுத்து கொள்ளுங்கள்’’ என்றார்.
அதன்பிறகு கேரள பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் அமித் ஷா பங்கேற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT