Published : 18 Oct 2014 08:45 AM
Last Updated : 18 Oct 2014 08:45 AM

21 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜெ. ஜாமீனில் இன்று விடுவிப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.இதைய‌டுத்து 21 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு அவர் இன்று ஜாமீனில் விடுதலை ஆகிறார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வ‌ழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 27-ம் தேதி அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்தது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து நால்வரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்குமாறு நால்வரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மதியம் 12.20 மணிக்கு ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தீர்ப்பின் சாராம்சத்தை அறிவித்தனர். இந்த தீர்ப்பின் நகலை நேற்று மாலை 5 மணிக்கு மேல் தான் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியது.

அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல்கள் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கும், ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ள பரப்பன அக்ரஹாரா சிறைத்துறைக்கும் தொலைநகல் செய்யப்படும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் வழங்கலில் பல்வேறு நடைமுறைகள் பின்பற் றப்படுவதால் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்குள் ஜெயலலி தாவின் வழக்கறிஞர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் அவரது விடுதலை ஒருநாள் தள்ளிப்போனது என்கிறார்கள் உச்சநீதிமன்ற வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.

இன்று விடுதலை

இது தொடர்பாக ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் 'தி இந்து' விடம் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தை தீர்ப்பின் நகலை பெற்றதும் சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி'குன்ஹாவிடம் சமர்ப்பிப் போம். அதனைத் தொடர்ந்து நால்வருக்கும் தலா 2 பேரின் சொத்து பத்திரத்தை தாக்கல் செய்வோம்.

பின்னர், நீதிபதி வழங்கும் ஆணையை பெற்றுக் கொண்டு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை நிர்வாகத்திடம் ஒப்படைத்த பிறகு,ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவார். நீதிமன்றம் மற்றும் சிறை நிர்வாகத்தின் பணி நேர‌ம் மாலை 6 மணியுடன் முடிவடைவதால், அனைத்து வேலைகளையும் உடனடியாக செய்து முடிக்க இருக்கிறோம்.

சனிக்கிழமை பிற்பகலுக்குள் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் 21 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு விடுதலை ஆவார்கள்'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x