

நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் 3-ம் வகுப்பு குளிர்சாதன (ஏசி) வசதி கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இத்தகைய ரயில்களில் ஏசி வகுப்புப் பெட்டிகளுக்கு அதிக வரவேற்பு இருப்பதையொட்டி ரயில்வே நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஏப்ரல் 1 2016 முதல் மார்ச் 10 2017 வரை எடுக்கப்பட்ட கணக்கின்படி நீண்ட தூர ரயில்களில் பயணித்தவர்களில் 17% பேர் மூன்றாம் வகுப்பு ஏசி வகுப்புப் பெட்டியையே தெரிவு செய்து பயணித்துள்ளனர். இதன்மூலம் ரயில்வே துறைக்கு 32.60% வருவாய் கிட்டியுள்ளது. கடந்த ஆண்டைவிட இது அதிகம்.
இதேகாலகட்டத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, தூங்கும்வசதி கொண்ட பெட்டிகளில் 59.78% பயணிகள் பயணித்துள்ளனர். இதன்மூலம் 44.78% வருவாய் கிட்டியுள்ளது. கடந்த ஆண்டு வருவாயை ஒப்பிடும்போது இது குறைவானதாகும்.
அதிகப்படியான பயணிகள் ரயிலில் 3-ம் வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுவதாலேயே இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை பயணிகள் தேர்வு செய்வது குறைந்ததற்கு காரணமாகும்.
அண்மையில் ரயில்வே நிர்வாகம் முழுக்க முழுக்க மூன்றாம் வகுப்பு ஏசி வசதி கொண்ட ஹம்சபர் எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தியது. இந்த ரயிலுக்கு அதிகளவில் வரவேற்பு கிடைத்தது.