Last Updated : 20 Jan, 2016 08:56 AM

 

Published : 20 Jan 2016 08:56 AM
Last Updated : 20 Jan 2016 08:56 AM

கோவாவில் 450 ஆண்டுகால அடக்குமுறை ஆட்சி: போர்ச்சுகல் பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும் - ஆர்எஸ்எஸ் மாநிலத் தலைவர் வலியுறுத்தல்

போர்ச்சுகல் பிரதமர் ஆன்டனியோ கோஸ்டா கோவா வருகை தந்தால், இம்மாநில மக்களிடம் 450 ஆண்டு கால அடக்குமுறை ஆட்சிக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் மாநிலத் தலைவர் சுபாஷ் வெலிங்கர் கூறினார்.

இது தொடர்பாக அவர் நேற்று கூறும்போது, “கோவா மண்ணில் அவருக்கு வரவேற்பு அளிப்பதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் பாஜக அரசு விரும்புகிறது. அவர் கோவா வருகை தந்து, வரவேற்பை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், கோவாவில் 450 ஆண்டு கால போர்ச்சுகீசிய அடக்குமுறை ஆட்சிக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

கோவாவில் ஆளும் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மகாராஷ்டிரவாதி கோமந்த கட்சி யின் அமைச்சர் ராமகிருஷ்ண தவலிகர் கடந்த வெள்ளிக்கிழமை கூறும்போது, “கோவாவின் பொரு ளாதாரத்தை சுரண்டியதற்காக இம் மாநில மக்களிடம் போர்ச்சுகல் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார். இந்நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் இவ்வாறு கூறியுள்ளார்.

போர்ச்சுகல் பிரதமரான ஆன்ட னியோ கோஸ்டாவின் தந்தை, தெற்கு கோவா மாவட்டத்தின் மார்கோவா நகரைச் சேர்ந்தவர். இந் நிலையில் கோஸ்டா, போர்ச்சுகல் பிரதமராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்து கோவா சட்டப்பேரவையில் கடந்த 15-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் காலத்தில் கோவா வருமாறு கோஸ்டாவுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் அப்போது முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் கூறினார்.

கோவா ஆர்எஸ்எஸ் தலைவர் சுபாஷ் வெலிங்கர் நேற்று மேலும் கூறும்போது, “கோவா மண்ணில் போர்ச்சுகீசியர்கள் ஏற்படுத்திய அழிவு மறக்க முடியாதது. அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

போர்ச்சுகல் ஆட்சியில் இருந்து 1961-ம் ஆண்டு, டிசம்பர் 19-ம் தேதி கோவா விடுதலை பெற்றது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x