Published : 16 Mar 2017 03:55 PM
Last Updated : 16 Mar 2017 03:55 PM
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை மீதான தடையை நீக்க முடியாது என்று அவரது மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தேசப்பாதுகாப்பு நலன் கருதியே தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறி உயர் நீதிமன்றம் அவரது தடைநீக்க மனுவை தள்ளுபடி செய்தது. மத்திய அரசின் தடை உத்தரவை எதிர்ப்பதற்கான தகுதி இந்த மனுவுக்கு இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
“தடை உத்தரவை மத்திய அரசு தேச நலன், இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு கருதி பிறப்பித்துள்ளது” என்று நீதிபதி சஞ்சீவ் சச்தேவா தெரிவித்தார்.
மத்திய அரசு தன் வாதத்தில் சரியான முறையில் யோசித்து எடுத்த முடிவே தடை உத்தரவு என்றும், ஜாகிர் நாயக் அறக்கட்டளை நாட்டின் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கும் என்ற அச்சத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறியது.
தங்களது இந்த வாதத்திற்கான ஆதாரங்களையும் தாங்கள் கோர்ட்டில் சமர்ப்பித்ததாக மத்திய அரசு தெரிவித்தது.
இதனையடுத்து மத்திய அரசு தடைக்கான காரணங்களை ஜாகிர் நாயக் அறக்கட்டளைக்கு தெரிவித்தது என்றும், எனவே மத்திய அரசு காரணங்களை அளிக்கவில்லை என்று கூறுவது தவறான வாதம் என்று நீதிமன்றம் கூறி தடையை நீக்க முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT