

டெல்லியில் ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி நிர்பயா வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதில் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பலியானார். 6 பேர் சேர்ந்த கும்பல் அந்த மாணவியை ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்தது. இந்தச் சம்பவம் நாட்டையே உலுக்கியது. நிர்பயாவுக்கு நீதி கேட்டு குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி நடத்தப்பட்டது. அங்கே திரண்ட மாணவர் கூட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது.
இதனால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான சட்டம் வலுவாக்கப்பட்டது. 2013-ல் நிர்பயா சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டப்படி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர்க்கு இந்திய தண்டனைச் சட்டம் 376-ஏ-வின் கீழ் மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டது.
வழக்கின் பின்னணி
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதில் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பலியானார்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமான அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் ஒருவர் இளம் குற்றவாளி என்பதால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து முடிந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு பிற்பகல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தூக்கு கிடைக்குமா?
குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் குடும்பச் சூழ்நிலையையும் அவர்கள் இளம் வயதையும் கருதி அவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்ற வாதத்தை முன்வைத்துள்ளனர்.
ஆனால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் தண்டனைகளை வலுவாக்க வேண்டும் என மகளிர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால், நிர்பயா வழக்கின் தீர்ப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.