நேபாளத்தில் அனைவருக்குமான சட்டம் வேண்டும்: பிரதமர் புஷ்ப கமல் தஹாலிடம் மோடி வலியுறுத்தல்

நேபாளத்தில் அனைவருக்குமான சட்டம் வேண்டும்: பிரதமர் புஷ்ப கமல் தஹாலிடம் மோடி வலியுறுத்தல்
Updated on
1 min read

நேபாளப் பிரதமர் புஷ்ப கமல் தஹால் என்கிற பிரசண்டா, நான்கு நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று நேபாளப் பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார். இதில் நிலநடுக்கத்தால் பாதிக் கப்பட்டுள்ள நேபாளத்தை மறு கட்டமைப்பதற்கு இந்தியா 15 கோடி டாலர் நிதியுதவி அளிப்பது உட்பட 3 ஒப்பந்தங் கள் கையெழுத்தாகின.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளின் தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறும்போது, “அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பொருளா தார வளர்ச்சி கொண்ட நாடாக நேபாளம் திகழவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். நேபாளத்தில் இந்தியா மேற்கொள்ளும் அனைத்து வளர்ச்சிப் பணிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தவும் குறித்த காலத்தில் முடிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

நேபாளத்தில் ஸ்திரத்தன்மை ஏற்பட பிரசண்டா மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டு கிறேன். நேபாளத்தில் அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பு களையும் பூர்த்தி செய்யும் வகை யில் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதில் பிரசண்டா தலைமையிலான அரசு வெற்றி பெறும் என நம்புகிறேன். இந்தியா நேபாளம் இடையிலான வேலியிடப்படாத எல்லையை காப்பதற்கு இரு நாடுகளின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளிடையே தொடர் ஒத்துழைப்பு அவசியம்” என்றார்.

நேபாள பிரதமர் பிரசண்டா பேசும்போது, “இந்தியா மீதான நல்லெண்ணம் தவிர எங்களிடம் வேறொன்றுமில்லை. இதுவே இரு நாடுகளையும் இணைத்து வைத்துள்ளது. அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தும் போது, அனைத்து மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதில் எனது அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in