Last Updated : 01 Oct, 2014 08:41 AM

 

Published : 01 Oct 2014 08:41 AM
Last Updated : 01 Oct 2014 08:41 AM

பத்திரிகை புகைப்படத்துக்காக துடைப்பம் பிடிக்கும் அமைச்சர்கள்: அர்விந்த் கேஜ்ரிவால் கிண்டல்

பத்திரிகை புகைப்படங்களுக்காக மத்திய அமைச்சர்கள் துடைப்பம் பிடித்து பெருக்குவதாக டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் கிண்டல் செய்துள்ளார்.

மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ‘தூய்மையான இந்தியா’ திட்டம் குறித்து கேஜ்ரிவாலுக்கு கடந்த செப்டம்பர் 23-ம் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் அளித்து கேஜ்ரிவால் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்த பிரச்சாரம் குறித்த ஒரு செய்தியில், மத்திய அமைச்சர்கள் பத்திரிகைகளில் தங்கள் புகைப்படங்கள் வெளியாகும் பொருட்டு துடைப்பங்களை தூக்கிப் பிடிப்பதாகவும், இன்னும் சிலர் சுத்தம் செய்யும் சாக்கில் சாலைகளில் குப்பைகளை கொட்டி விட்டு பெருக்குவதாகவும் வெளியாகியுள்ளது. இதுபோன்ற செயல்களால் இந்தியாவை தூய்மையாக்க முடியாது என்பது உங்களுக்கும் தெரியும்.

வரும் அக்டோபர் 2-ல் பிரதமர் நரேந்திர மோடியும் டெல்லி வால்மீகி சதனில் துடைப்பம் பிடிக்க இருப்பதாக அறிந்தோம். இது பெயரளவுக்கு என்றாலும் நல்ல விஷயம். ஆனால், இந்த பெயரளவு செயல்களால் பொதுமக்களை கவரலாமே தவிர, இந்தியாவை தூய்மையாக்க முடியாது. நாட்டை உண்மையிலேயே தூய்மையாக்க வேண்டுமெனில், துப்புரவுத் தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். டெல்லியில் கடந்த 30 ஆண்டுகளாக இவர்களில் பலர் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இதன் நிரந்தரப் பதிவேட்டில் பெயர் இடம் பெயரச்செய்ய ரூ. 10,000 முதல் 15,000 வரை லஞ்சம் தரவேண்டியுள்ளது.

துப்புரவுத் தொழிலாளர்கள் கழிவுநீர் கால்வாய்களில் இறங்கி துப்புரவு செய்வதற்கு முற்றுப்புள்ளி வைத்து அதற்கு பதிலாக, புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். டெல்லியை சுத்தம் செய்ய அதன் நகராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் கோடிக்கணக்கான பணத்தில் ஊழல் நடைபெறுகிறது. இதைத் தடுக்க வேண்டும்.

தூய்மையான இந்தியா பிரச்சாரத்தை ஆதரிக்கும் நாங்கள் அப்பணியை அக்டோபர் 2-ல் மட்டும் பெயரளவுக்கு செய்யாமல், தொடர்ந்து செய்வோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x