Published : 04 Feb 2017 09:42 AM
Last Updated : 04 Feb 2017 09:42 AM
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் தனது சகோதரர் சிவ்பால் சிங் யாதவை ஆதரித்தே முதலில் பிரச்சாரம் செய்யப் போவதாக சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு வரும் 11, 15, 19, 23, 27, மார்ச் 4 மற்றும் 8-ம் தேதி என 7 கட்டங்களாக தேர்தல் நடை பெறுகிறது. இதையொட்டி அம் மாநிலம் முழுவதும் பல்வேறு அரசி யல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
சமாஜ்வாதி கட்சியின் அதிகாரத்தை அகிலேஷ் யாதவ் கைப்பற்றியதாலும், காங்கிரஸுடன் கூட்டணி அமைத்ததாலும், இந்தத் தேர்தலில் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதில்லை என அவரது தந்தையும் மூத்தத் தலைவருமான முலாயம் சிங் யாதவ் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
அதேபோல் சமாஜ்வாதி சார்பில் ஜஸ்வந்த்நகர் தொகுதியில் போட்டியிடுவதற்காக மனுத் தாக்கல் செய்த அகிலேஷ் யாதவின் சித்தப்பா சிவ்பால் யாதவும் தேர்தல் முடிந்த பின் புதிய கட்சித் தொடங்கப் போவதாக அதிர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் அதிருப்தி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யப் போவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக முலாயம் சிங் யாதவ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். எனினும் தனது சகோதரர் சிவ்பால் யாதவை ஆதரித்தே முதலில் பிரச்சாரம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். அவர், ‘‘வரும் 9-ம் தேதி முதல் சிவ்பால் போட்டியிடும் ஜஸ்வந்த்நகர் தொகுதியில் இருந்து எனது பிரச்சாரத்தை தொடங்கப் போகிறேன். அதற்குப் பிறகே அகிலேஷுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பேன்’’ என்றார்.
-ஏஎன்ஐ
முலாயம் சிங்
சிவ்பால் சிங்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT