Last Updated : 07 Sep, 2016 03:01 PM

 

Published : 07 Sep 2016 03:01 PM
Last Updated : 07 Sep 2016 03:01 PM

முதல் தகவல் அறிக்கையை இணையதளத்தில் 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 24 மணி நேரத்துக்குள் இணைய தளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும், முதல் தகவல் அறிக்கை மிக முக்கிய பொது ஆவணம். ஆனால், அந்த முதல் தகவல் அறிக்கையை எளிதில் பெற முடிவதில்லை. எனவே, பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த 24 மணி நேரத்துக்குள் உரிய காவல்துறை இணைய தளத்தில் வெளியிட உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

இம்மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, சி.நாகப்பன் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்துக்குள் உரிய காவல்துறை இணைய தளத்தில் வெளியிட அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இணைய தொடர்பு வசதியில் குறைபாடுள்ள பகுதிகளில், 72 மணி நேரத்துக்குள் முதல் தகவல் அறிக்கையை இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்றும், தீவிரவாதம், ஊடுருவல், பெண்கள், குழந்தைகள், பாலியல் தொடர்பான வழக்குகள் மற்றும் பதற்றம் ஏற்படுத்தக் கூடிய வழக்குகளுக்கு இந்த உத்தரவில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

முதல் தகவல் அறிக்கை, இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பதை காரணம் காட்டி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் சலுகை எதுவும் கோர முடியாது என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் தெளிவுபடுத்தினர்.

தமிழகத்தில் 2 நாளில் பதிவேற்றம்

தமிழக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் (சிசிடிஎன்எஸ்) வலைப் பின்னல் வசதியை தமிழக காவல்துறை சிறப்பாக பயன்படுத்திவருகிறது. காவல் நிலையத்தில் இப்போது கையினால் எழுதப்படும் எஃப்ஐஆர் கிடையாது. அனைத்தும் கணினி மூலம் தட்டச்சு செய்யப்பட்டு, நகல் எடுத்து, முதல் தகவல் அறிக்கையாக (எஃப்ஐஆர் ) வழங்கப்படுகிறது.

இதை அப்படியே சிசிடிஎன்எஸ் இணைய பக்கத்தில் பதிவேற்றிவிடுவோம். இதற்காக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர், ஏட்டு அல்லது காவலர்கள் என 4 பேருக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் யார் விடுமுறை எடுத்தாலும் சிசிடிஎன்எஸ் இணைய பக்கத்தில் எப்ஐஆர் பதிவேற்றம் செய்வதில் தாமதம் ஏற்படாதவாறு பயிற்சி தரப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த இரு நாட்களுக்குள் அதன்விவரம் சிசிடிஎன்எஸ் பக்கத்தில் பதிவேற்றப்படுகிறது. அதன் பின்னர்அந்த வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் விவரம், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் தேதி, நீதிமன்றத்தில் நடந்த விசாரணை விவரங்கள் என அனைத்து தகவல்களும் வெளியிடப்படும். கணினியில் பழுது அல்லது வேறு காரணங்களால் தட்டச்சு செய்ய முடியாமல் போனால் மட்டுமே, உயர் அதிகாரிகளுக்கு தகுந்த விளக்க கடிதம் கொடுத்து, அதன் பின்னரே கையினால் முதல் தகவல் அறிக்கை எழுத முடியும். இதனால் அதை யாரும் விரும்புவதில்லை”என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x