Last Updated : 20 Jan, 2016 06:48 PM

 

Published : 20 Jan 2016 06:48 PM
Last Updated : 20 Jan 2016 06:48 PM

காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதி சுட்டுக்கொலை; போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி

தெற்கு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மோதலை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் இறந்தார்.

புல்வாமா மாவட்டத்தின் நைனா பட்டபோரா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அந்த கிராமத்தை நேற்று மாலை சுற்றி வளைத்தனர்.

இதில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இரவு மோதல் ஏற்பட்டது. இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். இவர் அதே மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியைச் சேர்ந்த ஷரிக் அகமது பட் என்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி என்றும் அடையாளம் காணப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனிடையே மோதலில் சேதமடைந்த வீட்டின் இடிபாடுகளை பாதுகாப்பு படையினர் அகற்றும்போது, அவர்கள் மீது உள்ளூர் இளைஞர்கள் கற்களை வீசி தாக்கினர். போலீஸ் வாகனம் ஒன்றுக்கும் தீ வைத்தனர்.

இதையடுத்து வன்முறையாளர்களை விரட்ட போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பர்வைஸ் அகமது என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் ஸ்ரீநகரில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x