

பெண்கள் நாகரிகமாக உடை அணிந் தால் பலாத்காரங்களை தடுக்க முடியும் என்று ஹரியாணா மாநில பாஜக மூத்த தலைவர் மனோகர் லால் கத்தார் தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஹரியாணாவில் வரும் 15-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ், பாஜக, இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
பாஜகவின் சார்பில் முதல்வர் வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் அந்த கட்சியின் மூத்த தலைவர் மனோகர் லால் கத்தார் முதல்வர் வேட் பாளராக கருதப்படுகிறார். கர்னால் தொகுதியில் போட்டியிடும் அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஒரு பெண் நாகரிகமாக உடை அணிந்தால் அந்தப் பெண்ணை யாரும் தவறான கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டார்கள். தற்போது மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றி இந்திய பெண்கள் நாகரிகமற்ற முறையில் உடை அணிகின்றனர்.
சுதந்திரத்துக்கும் ஓர் எல்லை உண்டு. சுதந்திரத்தை காரணம் காட்டி ஆடையின்றி தெருவில் நடமாட முடியாது. இந்திய பாரம்பரியத்தை பின்பற்றி இளம்பெண்கள் நாகரிகமாக உடை அணிய வேண்டும். அவ்வாறு செய்தால் பலாத்காரங்களை நிச்சய மாக தடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மனோகர் லால் கத்தாரின் கருத்துக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜக கட்சி வட்டாரத்தில்கூட அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அந்தக் கட்சியின் மூத்த தலைவர்கள் அம்பாலா கான்ட், அனில் விஜ் ஆகியோர் கூறியபோது, 21-ம் நூற்றாண்டில் இதுபோன்ற கண்ணோட்டம் தேவையற்றது என்று தெரிவித்தனர்.