

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டு தாக்குதலில் பலியான 25 வீரர்களும் உணவருந்துவதற்காக வாகனத்தை நிறுத்தியபோதே தாக்குதலில் உயிரிழந்ததாக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தியதில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாயினர். இவர்களில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், வீரர்கள் உணவருந்துவதற்காக வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்தியபோதுதான் இந்த தாக்குதல் நடந்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த பஸ்தார் மண்டலத்துக்குட்பட்ட சுக்மா மாவட்டம், சின்டகுபா அருகே உள்ள கலாபதர் வனப் பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், சிஆர்பிஎப் 74-வது படைப் பிரிவைச் சேர்ந்த 99 வீரர்கள் அங்கு முகாமிட்டிருந்தனர்.
திங்கள்கிழமை மதியம் 12.30 மணியளவில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாயினர்.
இது குறித்து சிஆர்பிஎப் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "மதிய உணவு அருந்துவதற்காகவே வீரர்கள் அனைவரும் குழுவாக சென்று கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த 300-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட கும்பலில் பெண்களும் இருந்தனர். கடந்த மார்ச் 11-ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலைப் போலவே தற்போதும் நடத்தப்பட்டிருக்கிறது" என்றார்.