Published : 28 Sep 2016 07:22 PM
Last Updated : 28 Sep 2016 07:22 PM
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. தீபாவளி உட்பட பண்டிகைகள் காலம் நெருங்குவதால் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், ரயில்வே ஊழியர்களுக்கு கடந்த 4 ஆண்டுகள் வழங்கியது போல் 78 நாட்கள் தீபாவளி போனஸ் வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன்மூலம் தொடர்ந்து 5-வது ஆண்டாக 78 நாட்கள் போனஸ் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும்.
ரயில்வேயில் உற்பத்தி சார்ந்த துறைகளில் பணியாற்றும் 12 லட்சம் ஊழியர்கள் இதன்மூலம் பலன் பெறுவார்கள். தசரா பண்டிகைக்கு முன்னர் இந்த போனஸ் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தேசிய ரயில்வே ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் எம்.ராகவய்யா கூறும்போது, ‘‘உற்பத்தி சார்ந்த ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ் வழங்க வேண்டும் என்று ரயில்வேயிடம் கோரிக்கை வைத்திருந்தோம். எங்கள் கோரிக்கையை அரசு ஏற்று போனஸ் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.18,000 வரை போனஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.
மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்ற அகில இந்திய ரயில்வே ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் ஷிவ்கோபால் மிஸ்ரா கூறும்போது, ‘‘இந்த போனஸ் அறிவிப்பு ரயில்வேயை இன்னும் மேம்படுத்த ஊழியர்களுக்கு தூண்டுதலாக இருக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT