Published : 16 Mar 2014 12:00 AM
Last Updated : 16 Mar 2014 12:00 AM

மோடி பிரதமரானால் ஈழத் தமிழர் நலன் காக்கப்படும்: வைகோ நம்பிக்கை

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று நரேந்திர மோடி பிரதமரானால் ஈழத் தமிழர்களைக் காக்க நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக வைகோ தெரிவித்துள்ளார்.

மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தலைமையில் வழக்கறிஞர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது.

இதில் மோடி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் பேசிய வைகோ, ‘‘மோடி பிரதமராக வேண்டும் என்று இங்கே வந்திருக்கிற வழக்கறிஞர்கள் அனைவரும் குரல் கொடுத்திருக்கிறீர்கள். நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. இதற்கு மோடி பொது வாழ்வில் நேர்மையை கடைபிடித்ததும் அவரது கடுமையான உழைப்பும் தான் காரணம். பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களுக்கு உரிய உரிமையும் அதிகாரமும் வழங்குகின்ற கூட்டாட்சிக் கொள்கை கடைபிடிக்கப்படும் என மோடி உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஈழத் தமிழர்களுக்கு செய்த துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டால் இலங்கை அரசுக்கு இந்திய அரசு எந்த உதவியும் செய்யாது, ஆயுதங்களை வழங்க மாட்டோம் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவித்தார். இதுபோல, நரேந்திர மோடி தலைமையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்களைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன்’’ என்றார்.

டெல்லி தல்கடோரா உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் மாநாட்டில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி மற்றும் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x