Last Updated : 25 Jul, 2016 03:58 PM

 

Published : 25 Jul 2016 03:58 PM
Last Updated : 25 Jul 2016 03:58 PM

மல்லையா முழு சொத்து மதிப்பு விவரத்தை அளிக்கவில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

சொத்து மதிப்பு விவரங்களை விஜய் மல்லையா முழுமையாக தெரிவிக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

பொதுப் பணம் தொடர்பாக பதிலளிக்க வேண்டிய பொறுப்பு, மல்லையாவுக்கு இருப்பதாகவும் மத்திய அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

பாரத ஸ்டேட் வங்கி உட்பட 17 வங்கிகளிடம் வாங்கிய 9,000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா தற்போது லண்டனில் பதுங்கியிருக்கிறார். அவரிடமிருந்து கடன் தொகையை வசூலிக்க முற்பட்ட வங்கிகள் மல்லையா தனது சொத்து மதிப்பை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், சொத்து மதிப்புகள் தொடர்பாக மல்லையா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதேவேளையில், விஜய் மல்லையா வழக்கு விசாரணைகளில் ஒத்துழைக்கவில்லை, சொத்து மதிப்பு குறித்து முழுமையான தகவல் அளிக்கவில்லை என எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. மல்லையா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியது.

மல்லையா மீதான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எஃப்.நாரிமன் அடங்கிய அமர்வு முன் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் ரோஹத்கி, "விஜய் மல்லையா தாக்கல் செய்துள்ள சொத்து விவரப் பட்டியலில் முழுமையான விவரங்கள் இல்லை. பிரிட்டன் மதுபான ஆலை அதிபர் டியாகோவிடம் பெற்ற 45 மில்லியன் டாலர் குறித்தும் விஜய் மல்லையா ஏதும் குறிப்பிடவில்லை. வெளிநாட்டு முதலீடுகள், வங்கிக் பண பரிவர்த்தனை தொடர்பாகவும் முழுமையான தகவல் இல்லை" எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பின் மனு மீது 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x