Published : 17 May 2017 08:21 PM
Last Updated : 17 May 2017 08:21 PM
ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா ஆகிய 3 நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வரும் 29-ம் தேதி புறப்படுகிறார்.
பயணத்திட்டத்தில் முதல் நாடாக ஜெர்மனி செல்லும் பிரதமர் மோடி, அங்கு 2 நாட்கள் தங்குகிறார். அப்போது, அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கலைச் சந்தித்து இருதரப்பு உறவு மற்றும் வணிகத் தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பாக அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து, வரும் 31-ம் தேதி ஸ்பெயின் செல்லும் மோடி, அங்கு அந்நாட்டு முக்கியத் தலைவர்களைச் சந்திக்கிறார். உள்கட்டமைப்பு, ஆற்றல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்யுமாறு அந்நாட்டு தொழிலதிபர்களுக்கு அவர் அழைப்பு விடுப்பார் என்று கூறப்படுகிறது.
அதன்பின்னர், ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி, செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடைபெறும் சர்வதேச வர்த்தக மாநாட்டில் பங்கேற்கிறார். ஜூன் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளின் முக்கியத் தலைவர்கள் மற்றும் சர்வதேச அளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரும் தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர்.
அப்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை மோடி சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பேச்சுவார்த்தையின் முக்கிய அங்கமாக இருக்கும். இதில், தமிழகத்தில் கூடங்குளம் அணு உலையில் 5-வது மற்றும் 6-வது அணு உலைகளை நிறுவுவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி பயணத்திட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT