Last Updated : 27 Sep, 2016 08:05 PM

 

Published : 27 Sep 2016 08:05 PM
Last Updated : 27 Sep 2016 08:05 PM

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: நிதிஷ் குமார் கிண்டல்

மத்திய அரசின் பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தை பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கிண்டலடித்துள்ளார். ஆண்டுக்கு ரூ.100 கோடி செலவிடப்பட்டால் ஒரு நகரம் பொலிவுறு நகரமாகி விடுமா என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

பிஹாரில் மக்களுக்கு அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் ‘7 நிச்சயங்கள்’ என்ற திட்டத்தை பிஹார் அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் ஒருபகுதியாக வரும் 2019-க்குள் ‘வீடுதோறும் குடிநீர்க்குழாய்’, ‘வீடுதோறும் கழிப்பறை’ ஆகிய இரு திட்டங்களை தொடங்கி வைத்து முதல்வர் நிதிஷ் குமார் பேசியதாவது:

இந்த ஏழு நிச்சயங்கள் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருமானால், பிஹார் மக்கள் அது நகரவாசிகளோ, கிராமவாசிகளோ அவர்கள் பொலிவுமிக்க குடிமகன்கள் (ஸ்மார்ட்டர் சிட்டிசன்ஸ்) ஆகி விடுவார்கள்.

அற்புதமான சாலை வசதி, போதுமான வடிகால் வசதி தவிர, வீடுதோறும் மின்சாரமும் குழாய் மூலம் குடிநீரும் கிடைத்தால் கிராம மக்கள் ஏன் நகரங்களுக்கு இடம்பெயரப் போகிறார்கள். எப்போது பொலிவுறு நகரங்கள் உருவாக்கப்படும் என எனக்குத் தெரியவில்லை.

நகரங்களில் கழிப்பறை கட்டுவதற்கு மட்டும் ரூ.300 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு நகருக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி என ரூ. 500 கோடி செலவிடுவதால் அது எப்படி பொலிவுறு நகரமாக மாறும். இவ்வாறு நிதிஷ் குமார் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சர்வண் குமார், மகேஷ்வர் ஹஸாரி, கிருஷ்நந்தன் வர்மா, கபில்டியோ காமத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

7 நிச்சயங்கள் திட்டத்தில் ஏற்கெனவே, அரசு வேலைகளில் பெண்களுக்கு 35 சதவீத இட ஒதுக்கீடு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x