Published : 28 Oct 2014 12:10 PM
Last Updated : 28 Oct 2014 12:10 PM

ஆன்லைன் டிக்கெட்டுக்கு வரவேற்பில்லை: திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.10 கோடி இழப்பு

திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்திய ஆன்லைன் டிக்கெட் தரிசன திட்டத்துக்கு பக்தர்களிடையே எதிர்பார்க்கப்பட்ட வரவேற்பு இல்லாததால், கடந்த 65 நாட்களில் மட்டும் தேவஸ்தானத்துக்கு ரூ. 10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த திட்டத்தை கைவிட தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

திருமலை-திருப்பதி தேவஸ் தானம் கடந்த இரண்டு மாதங் களுக்கு முன்னர் ரூ. 300 சிறப்பு தரிசன கட்டண டிக்கெட்டை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியது.

இதன் மூலம் ஆன்லைன் மற்றும் இ-தரிசன மையங்களில் பக்தர்கள் இந்த தரிசன டிக் கெட்டுகளை பெற்று சுவாமியை அந்த டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள சமயத்தில் தரிசித்து வருகின்றனர். முதலில் தினமும் 11 ஆயிரம் டிக்கெட்டுகளும், தற்போது 18 ஆயிரம் டிக்கெட்டுகளும் இந்த திட்டத்தின் கீழ் வழங்கி வருகின்றனர். விரைவில் இதனை மேலும் உயர்த்த முடிவு செய்தனர்.

ஆனால், கிராமப்பகுதி மற்றும் வெளி மாநில பக்தர்களிடையே இது குறித்து சரிவர தெரியாததால், தினமும் சராசரியாக 5,832 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகின்றன. இதனால் திருமலைக்கு வரும் பக்தர்கள் இந்த டிக்கெட்டுகள் கரண்ட் புக்கிங்கில் கிடைக்காமல் பெரும் அவதிப் பட்டு வருகின்றனர்.

இதனால் இலவச தரிசனத்துக்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. ஆன்லைனில் விற்பனை ஆகாத டிக்கெட்டுகளை பக்தர்களுக்கு கரண்ட் புக்கிங்கில் வழங்காததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2010-ம் ஆண்டில் அப்போதைய தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரியும், தற்போதைய ஆந்திர மாநில முதன்மை செயலாளருமான கிருஷ்ணாராவ், இந்த ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் முறையை அறிமுகப்படுத்தினார். இதனால் எந்த வித சிபாரிகளும் இன்றி பக்தர்கள் எளிய வகையில் சுவாமியை தரிசிக்கும் முறையை அனைத்து தரப்பு பக்தர்களும் வரவேற்றனர்.

தினமும் 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை பக்தர்களின் கூட்ட நெரிசலை பொறுத்து இந்த சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. இதன் மூலம் தேவஸ்தானத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 50 லட்சமும், மாதத்துக்கு ரூ. 15 கோடியும், ஆண்டுக்கு சுமார் ரூ. 180 கோடி வரையிலும் வருமானம் கிடைத்து வந்தது.

2014-15 தேவஸ்தான பட்ஜெட் கணக்குப்படி இந்த வருவாய் ஆண்டில் இந்த டிக்கெட் விற்பனை முலம் ரூ. 190 கோடி வருவாய் கிடைக்க வேண்டும். ஆனால் தற்போதைய ஆன்லைன் தரிசன முறை மூலம் கடந்த 65 நாட்களில் தேவஸ்தானத்துக்கு ரூ. 10 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த முறையை ரத்து செய்ய தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x