Published : 11 Apr 2017 04:48 PM
Last Updated : 11 Apr 2017 04:48 PM
தமிழக விவசாயிகள் பிரச்சினையை இன்று திமுக உறுப்பினர் திருச்சி சிவா மாநிலங்களவையில் மீண்டும் எழுப்பினார். அதில் தமிழக அரசு மீது எழுப்பிய புகாருக்கு அதிமுக உறுப்பினர் விஜிலா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14-ம் தேதி முதல் போராடி வருகின்றனர். இவர்கள் பிரச்சினையை மாநிலங்களவையில் எழுப்ப முயன்ற திருச்சி சிவாவிற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும், கிடைத்த சில நிமிடங்கள் வாய்ப்பில் பேசிய சிவா, தமிழக அரசு மற்றும் மத்திய அரசும் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
இது குறித்து சிவா பேசுகையில், ''கடந்த ஒரு மாதமாக தமிழக விவசாயிகள் டெல்லியின் கடும் வெயிலில் போராடி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாயக் கடன் ரத்து மற்றும் ஓய்வூதியம் ஆகியன அவர்களின் முக்கியக் கோரிக்கைகளாகும். இதை தமிழக அரசும் செய்யலாம். இதற்கான பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. தேசிய வங்கிகளின் கடன்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இது குறித்து மூத்த மத்திய அமைச்சர்கள் அல்லது பிரதமரின் அமைச்சர் நேரில் சென்று விவசாயிகளை சமாதானப்படுத்த வேண்டும்'' எனத் தெரிவித்தார்.
திருச்சி சிவா எழுப்பிய பிரச்சினைக்கு மாநிலங்களவையில் இருந்த ரேணுகா, சீதாராம் எச்சூரி, டி.ராஜா, டி.கே.ரங்கராஜன் உட்பட காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
தமிழக அரசின் மீது சிவா தனது பேச்சில் புகார் தெரிவித்த காரணத்தால், அதிமுக உறுப்பினரான விஜிலா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவர் பேச முற்பட்ட போது அதற்கு துணைத் தலைவர் அனுமதிக்கவில்லை. இதுபோல், தமிழக விவசாயிகள் பிரச்சினையை திமுக எழுப்புவது முதன்முறையல்ல. ஏற்கெனவே திமுக அவைத்தலைவரான கனிமொழி விவசாயிகள் பிரச்சினையை தற்போது பட்ஜெட் கூட்டத்தொடரில் சில நாட்களுக்கு முன் எழுப்பியிருந்தார்.
அதற்குப் பிறகு டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட திருச்சி சிவா, நேரில் தன் ஆதரவைத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT