Last Updated : 08 Nov, 2015 09:45 AM

 

Published : 08 Nov 2015 09:45 AM
Last Updated : 08 Nov 2015 09:45 AM

பிஹார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள்

மெகா கூட்டணிக்கு மகத்தான வெற்றி; நிதிஷுக்கு மோடி வாழ்த்து

*

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ் - லாலு - காங். மெகா கூட்டணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்து வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மெகா கூட்டணியின் இந்த வெற்றியால், அதன் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமார் முதல்வர் பதவியேற்பதும் உறுதியாகியுள்ளது. அவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.



கூட்டணி வாரியாக நிலவரம்

முடிவுகள் / முன்னிலை

பாஜக கூட்டணி

58

நிதிஷ் - லாலு - காங். கூட்டணி

179

இதர கட்சிகள்



7

ஆதாரம்:தேர்தல் ஆணையம் வலைதளம்



மொத்த இடங்கள்: 243 | ஆட்சி அமைக்கத் தேவையான இடங்கள்: 122

பிஹார் தேர்தல் செய்தி அப்டேட்ஸ்:

5.20PM: பாரதிய ஜனதா ஒரு கட்சி அல்ல. அது ஒரு முகமூடி | விரிவான செய்தி. | >வெற்றி குறித்து நிதிஷ் குமார், லாலுபிரசாத் யாதவ் கருத்து

5.00 PM: லட்டுகள், பட்டாசுகளுக்கு ஆர்டர் அளித்திருந்தோம், ஆனால் தேர்தல் முடிவுகள்... | விரிவான செய்தி.>இனிப்பு, பட்டாசு ஆர்டரை ரத்து செய்த பாஜக

4.15PM: பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணியின் தோல்வி, பிரதமர் மோடியின் அரசின் செயல்பாடுகள் மீதான தீர்ப்பு என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார். | விரிவான செய்தி - >மோடி, அமித் ஷாவின் கர்வம் சுக்குநூறாகியது: கேஜ்ரிவால்

3.20 PM: நிதிஷ் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பிஹார் மக்களின் தீர்ப்பை மதிப்பதாக குறிப்பிட்டுள்ளார். | முழு விவரம் - >பிஹார் மக்கள் தீர்ப்பை மதிக்கிறோம்: அமித் ஷா

2.35 PM: நிதிஷ் குமாருக்கு திமுக தலைவர் கருணாநிதி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், "வெற்றிக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நல்லாட்சிக்கும், பொருளாதாரப் புலத்தில் உங்கள் ஆட்சியின் சாதனைகளுக்காகவும், சமூக நீதிக்கான உங்களது கடமை உணர்வுக்காகவும் பிஹார் மக்கள் வாக்களித்தனர்" என்று கூறியுள்ளார்.

2.15 PM: பிஹார் தேர்தல் முடிவுகள் சமூக நீதிக்கும் வளர்ச்சிக்கும் கிடைத்த வெற்றி என்று நிதிஷ் குமாருக்கும், லாலு பிரசாத் யாதாவுக்கும் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். | விவரம் - >சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி: நிதிஷ், லாலுவுக்கு அன்புமணி வாழ்த்துக் கடிதம்

1.45 PM: பிஹார் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கிடைத்த தோல்வி, சகிப்பின்மை மற்றும் பண பலத்துக்கு கிடைத்த தோல்வி என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. | விரிவான செய்திக்கு ->பணபலம், 'சகிப்பின்மை'க்கு கிடைத்த தோல்வி: பிஹாரில் பாஜக வீழ்ச்சி மீது குவியும் விமர்சனங்கள்

12:50 PM: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணி வெற்றி பெரும் நிலை தெரிவதால், முதல்வர் பதவியேற்கவுள்ள நிதிஷ் குமாரின் பாட்னா வீட்டின் முன்பு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தொண்டர்கள் கூடி கொண்டாடி வருகின்றனர். | விவரம் ->பிஹார் வெற்றி: பாட்னாவில் நிதிஷ் வீட்டின் முன்பு கோலாகலம்

12.32 PM: பிஹார் மாநில தேர்தல் முடிவுகளால் பிரதமர் நரேந்திர மோடிக்கு இருக்கும் புகழுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஷானாஸ் உசைன் கருத்து கூறியுள்ளார். | விவரம் - > பிஹார் முடிவுகளால் பிரதமரின் புகழுக்கு பாதிப்பு ஏற்படாது: ஷானாவாஸ் உசைன் கருத்து

12.01 PM:முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமாரை தொடர்புகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அவரது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பிஹார் தேர்தல் முடிந்த பிறகான கருத்துக் கணிப்புக் குழப்பங்களிலிருந்து இன்னமும் டிவி சேனல்கள் விடுபடவில்லை என்பதற்கிணங்க, பிஹார் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படத் தொடங்கி சிறிது நேரத்துக்கெல்லாம் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை என்று சில தொலைக்காட்சி செய்திகள் அறிவித்தன. | விவரம்: >டிவி சேனல்கள் சொதப்பலால் 'முன்னிலை' வகித்த பாஜக



11.55 AM: "மதவாத சக்திகளை வீழ்த்தி முதலமைச்சராக வெற்றி பெற இருக்கும் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள்!' என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார். | விவரம் - >முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமாருக்கு கேஜ்ரிவால் வாழ்த்து

11.25 AM: பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ், சமீப காலமாக இல்லாத அளவிற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் நிலை தெரிகிறது. | விவரம்:>பிஹாரில் காங்கிரஸுக்கு மீண்டும் முன்னேற்றம்

10.40 AM: பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் நிலவும் தொகுதிகள் நிலவரம் ஏமாற்றத்தை அளிப்பதாக பாரதிய ஜனதாவின் டெல்லி எம்பியான மனோஜ் திவாரி கூறியுள்ளார். | விரிவான செய்தி - >பிஹாரில் ஆரம்பகட்ட முடிவுகள் ஏமாற்றம் தருகிறது: பாஜக எம்.பி. மனோஜ் திவாரி

9.30 AM: பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட லாலுவின் இரு மகன்களும் பின்தங்கி உள்ளனர். | முழு செய்திக்கு - >பிஹார் தேர்தலில் லாலுவின் இரு மகன்களுக்கும் பின்னடைவு

பின்னணி தகவல்கள்:

பிஹார் சட்டப்பேரவை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்றது. அக்டோபர் 12, 16, 28, நவம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடந்தது. பிஹார் வரலாற்றில் இல்லாத வகையில், இந்தத் தேர்தலில் 56.80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தம் 6.68 கோடி வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சேர்ந்து மெகா கூட்டணியாக களம் இறங்கின. எதிர் தரப்பில் பாஜக தலைமையில் பாஸ்வானின் லோக் ஜனசக்தி, முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் கட்சி உள்ளிட்டவை போட்டியிட்டன. இவ்விரு அணிகள் இடையில் மட்டுமே நேரடிப் போட்டி நிலவுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் நிதிஷ்குமாரும் காரசாரமாக பேசினர். ஒருவர் மீது ஒருவர் பகிரங்க குற்றச்சாட்டுகளை எழுப்பியதால் பிரச்சாரத்தில் அனல் பறந்தது. பாஜக கூட்டணியை ஆதரித்து 30 பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் செய்தார். அதேபோல் பாஜக தலைவர் அமித் ஷா, 85 பொதுக் கூட்டங்களில் பங்கேற்று காரசாரமாக பேசினார்.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறியதாக 2 கூட்டணிகளின் முக்கிய தலைவர்கள் மீதும் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில் பாஜக தலைவர் அமித் ஷா, ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், ஐஜத தலைவர் சரத் யாதவ் ஆகியோரும் அடங்குவர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பெரும்பாலும் ஆளும் ஐஜத கூட்டணியும் பாஜக கூட்டணியும் சம அளவில் தொகுதிகளை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளன. ஆனால், ‘டுடேஸ் சாணக்கியா’, என்டிடிவி.க்காக ஹன்சா நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று தெரிவித்திருந்தது.

இந்த தேர்தலில் ஆளும் ஐஜத.வில் இருந்த பிரிந்து பாஜக கூட்டணியில் சேர்ந்த ஜிதன்ராம் மாஞ்சி 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். லாலு பிரசாத் தனது 2 மகன்களை களம் இறக்கி உள்ளார்.

பிஹார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், சகிப்பின்மை தொடர்பாக நாடாளு மன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க் கட்சிகளின் தாக்குதல்களை அடக்க சரியாக இருக்கும் என்று பாஜக.வினர் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதேநேரத்தில் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தால், எதிர்க்கட்சிகளின் தாக்குதல் மேலும் பலமாக இருக்கும் என்று தெரிகிறது.

அதேபோல் தேர்தலில் ஐஜத தலைமையிலான மெகா கூட்டணி தோல்வி அடைந்தால், முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத்துக்கு பலத்த அடியாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x