Published : 31 Jan 2017 09:26 AM
Last Updated : 31 Jan 2017 09:26 AM

பினாமி சொத்து சட்டத்தில் 87 பேருக்கு நோட்டீஸ், 42 சொத்துகள் முடக்கம்

கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்க பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம் கறுப்புப் பணத்தை பதுக்கியவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதைத் தொடர்ந்து பினாமி சொத்துகள் விவகாரத்திலும் வருமான வரித் துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக அந்தத் துறை மூத்த அதிகாரிகள் கூறியதாவது:

பினாமி பரிவர்த்தனைகள் தடை சட்டத்தின் கீழ் இதுவரை 87 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான மதிப்புடைய 42 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

விசாரணையின் அடிப்படையில் மேலும் பலருக்கு நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

சந்தேகத்துக்கு உரிய வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து வருகிறோம். அதில் அடுத்தவர் பணத்தை தங்களது வங்கிக் கணக்கில் செலுத்தியவர்கள் மீதும் பினாமி பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகளாக அறிவிக்கப்படுபவர்களுக்கு 7 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை விதிக்கப்படும். மேலும் சொத்தின் சந்தை மதிப்பு விலையில் 25 சதவீதத்தை அபராத மாக செலுத்த நேரிடும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x