Published : 23 Jan 2014 09:00 AM
Last Updated : 23 Jan 2014 09:00 AM

மதி இழந்த முதல்வர்: கேஜ்ரிவால் மீது ஷிண்டே தாக்கு

தர்ணாவில் ஈடுபட்ட மதியிழந்த முதல்வரால் போலீஸாரின் விடுமுறையை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறினார்.

கடமையை செய்யத் தவறிய டெல்லி காவல்துறை அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ரயில் பவன் அருகே கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் போராட்டம் நடத்தினார்.

இதையடுத்து இரு காவல் துறை அதிகாரிகளை விடுப்பில் அனுப்பியுள்ளதாகவும், புகார் கூறப்பட்டுள்ள அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி 3 நாள்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தை கேஜ்ரிவால் கைவிட்டார்.

இந்நிலையில், மும்பையில் மரத்வாடா பகுதியில் உள்ள ஹிங்கோலியில் நடைபெற்ற கூட்டத்தில் ஷிண்டே புதன்கிழமை பேசியதாவது: “1970-களில் பாந்த்ராவில் உள்ள கேர்வாடி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது, எனக்கு விடுமுறை கிடைக்கவில்லை. எனக்கு திருமணம் ஆன புதிதில் கூட விடுமுறையின்றி பணியாற்றி வந்தேன். அப்போது, சிவ சேனை கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டதால் போலீஸாருக்கு விடுமுறை கிடைப்பது சிரமமாக இருந்தது.

அதே போன்ற நிலை, கடந்த திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் டெல்லியில் ஏற்பட்டது. மதியிழந்த முதல்வர் ஒருவர் தர்ணாவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், போலீஸாரின் விடுமுறையை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது” என்றார்.- பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x