

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் நடந்த மதக்கலவர வழக்குகளில் கைதான பாரதிய ஜனதா கட்சியின் இரு எம்.எல்.ஏக்கள், ஆக்ராவில் நடைபெற்ற நரேந்திர மோடியின் பொதுக்கூட்ட மேடையில் கௌரவிக்கப்பட்டனர்.
ஆனால், இவர்களைக் கெளரவிக்கும் நிகழ்ச்சி, மேடையில் குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான மோடி வருவதற்கு முன்பாகவே நடந்து முடிந்தது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் இன்று 'விஜய் சங்ரானந்த்' எனும் பெயரிலான பொதுக் கூட்டம் நடந்தது.
இதில், உத்தரப் பிரதேசத்தின் முசாபர் நகர் மதக் கலவர வழக்குகளில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதாகி ஜாமீனில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் இரு எம்.எல்.ஏக்களான சுரேஷ் ராணா மற்றும் சஞ்சய் சோம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு உபி மாநில பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் பாஜகவின் சட்டசபை தலைவர் லால்ஜி டண்டன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். ஆனால், இந்த நிகழ்ச்சி, மோடி மேடையில் ஏறுவதற்கு சற்று முன்பாகவே செய்து முடிக்கப்பட்டது.
பின்னர், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மோடி, டெல்லியில் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் அரசுக்கு மக்களின் வளர்ச்சி திட்டங்கள் மீது அக்கறை கிடையாது என்றும், ஊழல் செய்தும், அரசியல் கட்சிகளை பிரித்தும் வாக்குகளை பெறுவதில் மட்டுமே கவனமாக இருக்கிறது காங்கிரஸ் என்றும் சாடினார்.