Published : 03 Jun 2016 04:47 PM
Last Updated : 03 Jun 2016 04:47 PM
மதுரா கலவரம் இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மதுரா தொகுதி பாஜக எம்.பி. ஹேமமாலினி, தன்னுடைய படப்பிடிப்பு படங்களை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டதால் சர்ச்சை எழுந்தவுடன், படங்களை நீக்கியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் ஜவஹர் பாக் பகுதியில் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் போது ஏற்பட்ட மோதலில் 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 24 பேர் கொல்லப்பட்டனர். 124 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மதுரா தொகுதி பாஜக எம்.பி. ஹேமமாலினி, தன்னுடைய படப்பிடிப்பு படங்களை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டார். இது ஹேமமாலினியின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாக சர்ச்சை எழுந்தவுடன், படங்களை நீக்கியுள்ளார்.
அதாவது, ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் ஹேமமாலினியின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்து பதிவுகள் கொட்டப்பட்ட நிலையில், அவர் தனது படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட படங்களை நீக்கினார்.
கலவரத்துக்கு உ.பி. அரசின் அலட்சியமே காரணம்: ஹேமமாலினி
இதனிடையே மதுராவில் நடந்த கலவரத்துக்கு உ.பி. அரசின் அலட்சியமே காரணம் என அத்தொகுதி எம்.பி. ஹேமமாலினி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரா தொகுதி எம்.பி. ஹேமமாலினி, "மதுரா சம்பவம் மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது. போலீஸ்காரர்களும், பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஜவஹர் பாக் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளாக உ.பி. மாநில அரசு இவ்விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்தது ஏன்?
நடந்த சம்பவத்துக்கு உத்தரப் பிரதேச அரசின் அலட்சியமே காரணம். முதல்வர் அகிலேஷ் யாதவிடம் நான் கேள்வி எழுப்புவேன். மதுரா சம்பவம் குறித்து மத்திய அரசுக்கும் எழுதவிருக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT