Published : 11 Oct 2014 10:36 AM
Last Updated : 11 Oct 2014 10:36 AM

பிரபலங்களை மிரட்டி பணம் பறிப்பு: கன்னட நடிகையிடம் போலீஸ் தீவிர விசாரணை - மேலும் 2 பேர் கைது

பிரபலங்களுடன் படுக்கை அறையில் இருப்பது போன்ற வீடியோ எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்த கன்னட திரைப்பட‌ நடிகை நயனா கிருஷ்ணாவிடம் பெங்களூர் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரை சேர்ந்த நயனா கிருஷ்ணா (26) பல்வேறு கன்னட திரைப்ப‌டங்களிலும்,7 தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை பெங்களூர் சுந்தர்ராம் நகரைச் சேர்ந்த 68 வயதான மருத்துவர் ஒருவர் மைக்கோ லே அவுட் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில்,‘‘நடிகை நயனா தன்னை ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டுகிறார். ஒரு வாரத்துக்குள் பணம் தராவிட்டால் நடிகை ரிஹானாவுடன் படுக்கை அறையில் இருந்த வீடியோவை வெளியிட்டு விடுவதாக கூறுகிறார் ''என கூறியுள்ளார்.

போலீஸாரின் திட்டப்படி, ரூ.10 லட்சத்தை வாங்க வந்த நயனாவின் நண்பர்கள் மல்லேஷ், ஹேமந்த் ஆகிய இருவரும் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இந்த சதித் திட்டத்துக்கு நடிகை நயனா கிருஷ்ணாவே காரணம் என தெரிய வந்தது.

நடிகை நயனா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அன்றிரவே கைது செய்தனர். பெங்களூர் மாநகர 9-வது அமர்வு நீதிமன்றம் 10 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க‌ அனுமதியளித்தது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களில் நடிகை நயனா மீதும், அவரது தோழியும் நடிகையுமான ரிஹானா மீதும் மேலும் 3 பேர் பெங்களூர் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீ ஸார் நடிகை நயனாவிடம் தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் 2 பேர் கைது

இதனிடையே நடிகை நயனாவுடன் இணைந்து சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக சுனில் குமார், ரகு ஆகிய இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர சதியில் ஈடுபட்ட‌ நடிகைகள் ரிஹானா, மேக்னா மற்றும் ரமேஷ் உள்ளிட்டோர் தலைமறைவாக இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x