Last Updated : 27 Jul, 2016 08:28 AM

 

Published : 27 Jul 2016 08:28 AM
Last Updated : 27 Jul 2016 08:28 AM

காலங்காலமாக நடக்கிறது என்பதற்காக ஜல்லிக்கட்டை நியாயப்படுத்த முடியுமா? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

காலங்காலமாக நடக்கிறது என்பதற்காக ஜல்லிக்கட்டை நியாயப்படுத்த முடியுமா என்று தமிழக அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த விதிக்கப்பட்டி ருந்த தடையை நீக்கும் வகையில் மத்திய அரசு கடந்த ஜனவரி 7-ம் தேதி ஓர் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததையடுத்து, ஜல்லிக் கட்டுக்கு தடை விதித்து பிறப்பிக் கப்பட்ட உத்தரவை சீராய்வு செய்யக்கோரி, தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப் பட்டிருந்தது.

தமிழக அரசின் வாதத்தை மத்திய அரசும் ஆதரித்துள்ளது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ரோஹின்டன் எப்.நாரிமன் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே ஆஜராகி வாதிடு கையில், ‘தமிழகத்தில் நடை பெறும் ஜல்லிக்கட்டை விட கொடூரமாக நடத்தப்படும் காளை விளையாட்டுகள் வளர்ந்த நாடு களில் நடைபெறுகின்றன. அவர் கள் இறுதியில் காளைகளை ஈட்டியால் குத்தி கொன்று விடுகின்றனர். இத்தகைய விளை யாட்டுகளை பிரான்ஸ் உள்ளிட்ட 8 நாடுகள் சட்டப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. தமிழகத்தில் கிராம சூழ்நிலையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறுவதில் எந்த தவறும் இல்லை. நூற்றாண்டு கணக்கில் இந்த விளையாட்டு நடைபெற்று வருகிறது’ என்று வாதிட்டார். மேலும், இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றும்படி கோரினார்.

அப்போது நீதிபதிகள், ‘காலங்காலமாக ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது என்பதற்காக அதை நியாயப்படுத்த முடியுமா? குற்றம் என்று அறிவிக்கும்வரை, குழந்தை திருமணம் கூட காலங்காலமாக நாட்டில் பின் பற்றப்பட்ட நடைமுறைதான்’ என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, மத்திய அரசின் உத்தரவு சட்டப்பூர்வமானதா என்பது குறித்த இறுதி விசாரணை ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x