Published : 16 Jan 2014 04:02 PM
Last Updated : 16 Jan 2014 04:02 PM

பெண் வழக்கறிஞர் அளித்த பாலியல் புகார் விவகாரம்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஸ்வதந்தர் குமார் பற்றி செய்தி வெளியிட தடை

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஸ்வதந்தர் குமார் மீதான பாலியல் புகார் தொடர்பான செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

2012-ம் ஆண்டு மே மாதம், பயிற்சி வழக்கறிஞராக இருந்த தன்னிடம் ஸ்வதந்தர் குமார் தவறாக நடந்து கொண்டார் என்று பெண் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக செய்திகளை வெளியிட்ட ஓர் ஆங்கில நாளிதழ், 2 செய்தித் தொலைக்காட்சி சேனல்களுக்கு எதிராக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு ஸ்வதந்தர் குமார் வழக்கு தொடர்ந்தார். மேலும், தன்னைப் பற்றி செய்திகளை வெளியிடுவதற்கு தடை கோரியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த புதன்கிழமை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட டெல்லி உயர் நீதிமன்றம், ஸ்வதந்தர் குமார் மீது பெண் வழக்கறிஞர் கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணை விவரங்களை மட்டுமே செய்தியாக வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தது. இடைக்கால உத்தரவை வியாழக்கிழமை வெளியிடுவதாகவும் தெரிவித் திருந்தது.

அதன்படி டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மன்மோகன், வியாழக்கிழமை அளித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது: “சம்பந்தப் பட்ட ஊடகங்களும், அந்த பெண் வழக்கறிஞரும் ஸ்வதந்தர் குமாரின் புகைப்படங்கள், அவரைப் பற்றிய செய்திகளை வெளியிடக்கூடாது. இந்த உத்தரவை அடுத்த விசாரணை நடைபெறும் பிப்ரவரி 24-ம் தேதி வரை பின்பற்ற வேண்டும்” என்றார்.

அதோடு, ஸ்வதந்தர் குமாரின் புகார் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கும் பெண் வழக்கறிஞருக்கும் நோட்டீஸ் அனுப்ப டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக ஸ்வதந்தர் குமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, “வழக்கறிஞராகவும், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் 43 ஆண்டுகளாக சேவை செய்த ஸ்வதந்தர் குமார் பற்றி வெளியாகும் செய்திகள், அவரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், அடிப்படை உரிமையை மீறுவதாகவும் உள்ளது.

எனவே, அவர் தொடர்பாக செய்தி வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x