

கன்னட மொழியைப் பேசுமாறு வலியுறுத்தி மணிப்பூர் மாணவர்களைத் தாக்கிய 3 பேரை பெங்களூர் போலீஸ் கைது செய்துள்ளது.
மணிப்பூர் மாணவர்களைத் தாக்கிய இந்தச் சம்பவம் நேற்று பெங்களூரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் நடந்துள்ளது.
இது குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மணிப்பூர் மாணவர்கள் 3 பேர் உணவு விடுதி ஒன்றில் இரவு உணவு எடுத்துக் கொள்ள வந்திருந்தனர். மேசையில் அவர்கள் சற்று சத்தம் போட்டு பேசவே, மெதுவாகப் பேசுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதற்கு இந்த மாணவர்கள் ஆங்கிலத்தில் பதில் அளித்தனர். உடனே கன்னடத்தில் பேசு என்று அவர்களைக் கண்டித்துள்ளனர் பெங்களூரைச் சேர்ந்த அந்த நபர்கள்.
மேலும், ‘கன்னட உணவை உண்கிறீர்கள், கர்நாடகாவில் வாழ்கிறீர்கள், நீங்கள் கன்னட மொழியில்தான் பேசவேண்டும், கன்னட மொழியைப் பேசு இல்லையேல் கர்நாடகாவை விட்டு வெளியேறு’ என்று கூறி மாணவர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் மைக்கேல் என்ற மாணவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்று அந்த உயரதிகாரி தெரிவித்தார்.