

கழிவறைகள் போதிய அளவு இல்லாததால்தான் அதிக எண்ணிக்கையில் பாலியல் பலாத்காரங்கள் நடைபெறுகின்றன என, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கிரிஜா வியாஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ 'கழிவறை கட்டுவதற்கு முன்னுரிமை, கோயில் இரண்டாம்பட்சம்' என நரேந்திர மோடி சமீபத்தில் கூறியிருக்கிறார். இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் திட்டம். முறையான கழிவறைகளைக் கட்டுவதுதான் எங்கள் அரசின் செயல்திட்டம். இதனைச் செயல்படுத்த அரசு உறுதிபூண்டிருக்கிறது.
எங்களின் செயல்திட்டத்தை யாராவது எடுத்துக் கொண்டால் அதைப் பற்றிச் சொல்ல ஏதுமில்லை. மோடி தாராளமாக குஜராத்தில் செயல்படுத்தலாம்.
மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்தான் இவ்வாசகத்தைக் குறிப்பிட்டுச் சொன்னார். எங்களது பட்ஜெட்டில் இதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.
கழிவறை சார்ந்து பல மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. சுகாதாரத்திற்காக அரசு நிறைய செய்திருக்கிறது. முறையான கழிவறைகள் இல்லாததால், பெண்கள் இயற்கை உபாதைக்காக வெளியே செல்லும் போதுதான் பெரும்பாலான பாலியல் பலாத்காரச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. மக்கள் பிரதிநிதிகள், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 சதவீதத்தை இப்பிரச்னைக்காக ஒதுக்கலாம்” என்றார் கிரிஜா.