Published : 03 Feb 2014 01:50 PM
Last Updated : 03 Feb 2014 01:50 PM

இத்தாலி மாலுமிகள் பிரச்சினையில் ஒரு வாரத்தில் தீர்வு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கேரள மீனவர்கள் இருவரை இத்தாலி மாலுமிகள் சுட்டுக் கொன்ற வழக்கில் நிலவும் பிரச்சினையை இன்னும் ஒரு வார காலத்தில் சரி செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு கேரள கடல் பகுதியில் மீனவர்கள் இருவர் இத்தாலி நாட்டு மாலுமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான அமர்வு முன் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். அதற்கு மேலும் விசாரணையை ஒத்தி வைக்க முடியாது என்றனர்.

கடைசியாக கடந்த ஜனவரி மாதம், வழக்கு விசாரணைக்கு வந்த போது இத்தாலி அரசுடன் பேசி வருவதாக அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரம் வாஹன்வதி தெரிவித்திருந்தார். இதனையடுத்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மீண்டும் மத்திய அரசு கால அவகாசம் கேட்டதையடுத்து, ஒரு வாரத்திற்குள் வழக்கு விசாரணையில் உள்ள முடக்கத்தை நீக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x