

நாட்டின் 68-வது குடியரசு தின விழா டெல்லியில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் முதல்முறையாக தேசிய பாதுகாப்புப் படையின் கறுப்பு பூனை வீரர்கள், தேஜாஸ் போர் விமானங்கள், தனுஷ் பீரங்கிகள் அணிவகுப்பில் பங்கேற்றன. சென்னை யில் நடந்த விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியேற்றினார்.
டெல்லியில் குதிரைப்படை வீரர்கள் அணிவகுக்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, சிறப்பு விருந்தினரான அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நயன் டெல்லி ராஜபாதைக்கு வந்தனர். அவர்களை பிரதமர் நரேந்திர மோடி, முப்படைத் தளபதிகள் வரவேற்றனர். விழா மேடையில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேசியக் கொடியேற்றினார்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் உயிரிழந்த அசாமை சேர்ந்த ராணுவ வீரர் ஹேங்பன் தாதாவுக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. அவரது மனைவி சாசென் லோவாங், பிரணாப் முகர்ஜியிடம் இருந்து விருதைப் பெற்றுக் கொண்டார்.
விழாவில் முப்படைகளின் வலிமையை பறைசாற்றும் அணிவகுப்பு மற்றும் நாட்டின் பன்முக கலாச்சாரத்தை பிரதி பலிக்கும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெற்றன.
அரபு அமீரக படை வீரர்கள்
விழாவில் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நயன் பங்கேற்றார். அவரை கவுரவிக்கும் வகையில் முதல்முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த முப்படை வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற் றனர்.
இந்த ஆண்டு அணிவகுப்பில் முதல் முறையாக தேசிய பாதுகாப்புப் படையைச் (என்.எஸ்.ஜி) சேர்ந்த 140 கறுப்பு பூனை வீரர்கள், எம்.பி-5 ரக துப்பாக்கியுடன் மிடுக்காக ராஜபாதை யில் நடைபயின்றனர்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் இலகுரக போர் விமானங்கள் குடியரசு தின விழாவை முதல்முறை யாக அலங்கரித்தன. விழா நடந்தபோது அவை வானில் சீறிப் பாய்ந்தன. நான்காம் தலைமுறையைச் சேர்ந்த தேஜாஸ் விமானங்கள் மணிக்கு1,350 கி.மீ. வேகத்தில் பறக்கக் கூடியவை.
ருத்ரா, துரூப் இலகு ரக ஹெலி காப்டர்கள், எம்.ஐ-35 ஹெலிகாப்டர்கள், சி-130ஜே, சி-17 விமானங்கள், சுகோய், ஜாகுவார், மிக் 29 ரக போர் விமானங்கள் வானில் சீறிப் பாய்ந்தன.தரையில் இருந்து 300 மீட்டர் உயரத்தில் மூன்று போர் விமானங்கள் மணிக்கு 780 கி.மீ. வேகத்தில் மின்னலாகப் பாய்ந்தன.
விழா நடைபெற்ற போது லேசானசாரல் மழை பெய்தது. அதோடு எம்ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர்களும் பார்வையாளர்கள் மீது பூ மழை பொழிந்தன.
அணிவகுப்பில் தனுஷ் ரக பீரங்கிகள் முதல்முறை யாக பங்கேற்றன. இவை போபர்ஸ் பீரங்கிகளின் மேம் படுத்தப் பட்ட வடிவமைப்பு ஆகும். மேலும் பீஷ்மா ரக பீரங்கிகள், ஆகாஷ், பிரம்மோஸ் ஏவு கணைகள், சுவாதி ரேடார் உள்ளிட் டவை இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் ராஜ பாதையை கடந்து சென்றன. கடற்படை சார்பில் கொல்கத்தா, கல்வாரி நீர்மூழ்கி கப்பல் களின் மாதிரிகள், கடற்படை ரோந்து விமானத்தின் மாதிரிகள் அடங்கிய வாகனம் ராஜபாதையில் வலம் வந்தது.
ராணுவ போலீஸ் படை வீரர்கள் மோட்டார் சைக்கிளில் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தினர். டெல்லி பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவிகள் கண்கவர் கலைநிகழ்ச்சிகளை நடத் தினர்.
பல்வேறு மாநிலங்களின் கலாச் சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் விதவிதமான அலங்கார ஊர்திகள் அணிவகுப்பை அலங்கரித்தன. தமிழகத்தின் சார்பில் மாநிலத்தின் கலாச்சார பெருமையை பறைசாற்றும் வகையில்கரகாட்டம், நாதஸ்வர கச்சேரியுடன் கூடிய அலங்கார ஊர்தி ராஜபாதையில் வலம் வந்தது. இந்த ஊர்தியில் காளி, அம்மன் உருவச் சிலைகள் இடம்பெற்றிருந்தன.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பல்வேறு கட்சியின் மூத்த தலைவர்கள் விழாவில் பங்கேற்றனர்.
காஷ்மீரில் முழுஅமைதி
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிர வாதிகள் அச்சுறுத்தல், பிரி வினைவாதி களின் போராட்டங்களைத் தடுக்க குடியரசு தின விழாவின்போது செல்போன் சேவை, இணையதள இணைப்புகள் துண்டிக்கப்படுவது வழக்கம்.
கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் செல்போன், இணையதள இணைப்புகள் துண்டிக்கப்படாமல் குடியரசு தின விழா அமைதியாக நடைபெற்றது. கடந்த 2016 விழாவின்போது தொலைத் தொடர்பு சேவைகள் நிறுத்தப்பட்டன.
எனினும் இந்த ஆண்டு செல் போன், இணையதள சேவைகள் வழக்கம்போல செயல்பட்டன. காஷ்மீரின் பெரும்பாலான பகுதிகளில் அமைதியாக விழா நடைபெற்றது. நகரில் நடந்த விழாவில் ஆளுநர் என்.என்.வோரா தேசியக் கொடியேற்றினார். முதல்வர் மெகபூபா முப்தி, மாநில அமைச் சர்கள் விழாவில் பங்கேற்றனர்.
சென்னையில் விழா
தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தின விழா நடந்தது. காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்றி வைத்தார். பின்னர், முப்படை வீரர்கள், தமிழக காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தமிழகத்தில் நிரந்தர ஆளுநர் இல்லாத நிலையில், குடியரசு தின விழாவில் முதல்முறையாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கொடியேற்றி வைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள், திமுக செயல் தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர். பள்ளி, கல்லூரி மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. அரசுத் துறைகளின் சார்பில் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பும் நடந்தது.