Last Updated : 12 May, 2017 11:41 AM

 

Published : 12 May 2017 11:41 AM
Last Updated : 12 May 2017 11:41 AM

மதிய உணவில் பாம்புக்குட்டி: டெல்லி அருகே அரசுப்பள்ளியில் அதிர்ச்சி

டெல்லி, ஃபரிதாபாத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்புக்குட்டி இருந்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த உணவை உண்ட 2 ஆசிரியர்கள் மற்றும் 6 மாணவர்கள் நேற்று (வியாழக்கிழமை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள துணை ஆணையர் சமீர் பால், ஃபரிதாபாத் தாசில்தார் தலைமையில் ஐந்து நபர்கள் அடங்கிய குழுவொன்றை வியாழக்கிழமையே அமைத்துள்ளார். அக்குழு பள்ளியின் சமையலறையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்.

மற்றொரு துணை ஆணையர் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

எப்படித் தெரிய வந்தது?

மதிய உணவை உண்ண எத்தனித்த சிறுமி ஒருவர், உணவில் பாம்புக்குட்டி இருப்பதை கவனித்து ஆசிரியர்களிடம் கூறியுள்ளார். அதற்குப் பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆனால் மாணவி எச்சரிப்பதற்கு முன்னாலேயே 2 ஆசிரியர்களும், 6 மாணவர்களும் சத்துணவை உண்டு விட்டனர்.

பெரிய பாதிப்பில்லை

மது என்ற இரண்டாம் வகுப்பு மாணவி, அந்த உணவை உண்ட உடனேயே வாந்தி எடுத்துள்ளார். அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 11- 13 வயது மாணவர்கள் ஐந்து பேருக்கு குமட்டல் ஏற்பட்டது. அவர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பெற்றோரின் வலியுறுத்தலுக்குப் பிறகு அவர்கள் வீடு திரும்பினர்.

பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

இந்த சம்பவம் வெளியான பிறகு, ஃபரிதாபாத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மதிய உணவு அளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தனியார் உணவு நிறுவனம் ஒன்று சுமார் 16,000 மாணவர்களுக்கு தினமும் உணவு வழங்கிவருகிறது.

இதுகுறித்து 'தி இந்து'விடம் பேசிய சமீர் பால், ''மாணவர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இதற்குக் காரணமானவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களின் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x