ஜெ. தீர்ப்பில் தவறுகள், கணிதப் பிழைகள்: அப்பீல் மனுவில் கர்நாடக அரசு பட்டியல்

ஜெ. தீர்ப்பில் தவறுகள், கணிதப் பிழைகள்: அப்பீல் மனுவில் கர்நாடக அரசு பட்டியல்
Updated on
2 min read

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் தர்க்க ரீதியிலான தவறுகள், கணிதப் பிழைகள் நிரம்பியிருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் கர்நாடக அரசு பட்டியலிட்டுள்ளது.

குறிப்பாக, அக்னிஹோத்ரி வழக்குடன் ஜெயலலிதா வழக்கை ஒப்பிட்டு மேற்கோள் காட்டியது மிகப் பெரிய தவறு என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு செவ்வாய்க்கிழமை மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

உச்ச நீதிமன்ற விடுமுறை கால அமர்வு முன் ஆஜரான கர்நாடக அரசு உதவி வழக்கறிஞர் சந்தேஷ் சவுட்டா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு சுமார் 2700 பக்கங்கள் கொண்டதாக இருந்தது.

கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், "ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் அப்பட்டமான கணிதப் பிழைகள் உள்ளன. இந்த வழக்கில் கர்நாடக அரசை சிறப்பு நீதிமன்றம் ஒரு வாதியாகக் கூட கருதவில்லை.

பவானி சிங் அரசு சிறப்பு வழக்கறிஞராக நீக்கப்பட்டபோது உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை முன் வைத்தது. ஆனால் அதைகூட சிறப்பு நீதிமன்றம் பின்பற்றவில்லை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீட்டு மனுவின் முக்கிய அம்சங்கள்:

'சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்பட்டது நீதிக்கு முரணானது. கடந்த மே 11-ம் தேதியன்று நீதிபதி குமாரசாமியால் வழங்கப்பட்ட தீர்ப்பு பூடகமானது. தர்க்கரீதியாக தவறானது. அப்பட்டமான கணிதப்பிழைகள் உள்ளன.

கடந்த 2014-ல் நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பினை ரத்து செய்ததற்கான காரணங்களைக்கூட குமாரசாமி தனது தீர்ப்பில் அறிவுறுத்தவில்லை.

மேலும் நீதிபதி குமாரசாமி, ஜெயலலிதா தரப்பினர் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன்களையெல்லாம், ஜெயலலிதாவின் வருமானமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கூறி, வங்கியிலிருந்து ஜெயலலிதா தரப்பினர் கடன்களைப் பெற்றார்கள் என்ற பட்டியலையும், அதன் கூட்டுத் தொகையையும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா தரப்பினர் பெற்ற கடன் 24,17,31,274 ரூபாய் என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அவரே பட்டியலிட்ட பத்து கடன்தொகையை கூட்டினால், அதன் கூட்டுத் தொகை 10,67,31,274 ரூபாய்தான் வரும். இதன்படி ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 76.7% வரும்.

அக்னிஹோத்ரி வழக்கை மேற்கோள் காட்ட முடியாது

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு வருமானத்தை விட 8.12 சதவீதமே அதிகமாக உள்ளதால் அவரை விடுதலை செய்வதாக குமாரசாமி கூறியுள்ளார். ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற அக்னிஹோத்ரி வழக்கை மேற்கோள் காட்டியுள்ளார். அது செல்லாது.

ஏனெனில், அக்னிஹோத்ரி வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்தின் மதிப்பு வெறும் ரூ.11,350. ஆனால் ஜெயலலிதா வழக்கில் சொத்து மதிப்பு கோடிகளில் உள்ளன. அக்னிஹோத்ரி வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்து சொற்பமானதாக இருந்ததாலேயே அவர் விடுவிக்கப்பட்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in