Published : 17 Jan 2017 03:10 PM
Last Updated : 17 Jan 2017 03:10 PM
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து எதிர்கொள்வது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்தார் அகிலேஷ் யாதவ். அப்போது அவர் "உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து எதிர்கொள்வது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இதனால், உத்தரப் பிரதேசத்தில் மெகா கூட்டணி அமைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. அகிலேஷுக்கு நெருக்கமான கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ராம்கோபால் யாதவ், "தேர்தல் கூட்டணி குறித்து அகிலேஷின் முடிவே இறுதியானது. ஆனால், தேர்தலில் மெகா கூட்டணி அமையும் என நான் நம்புகிறேன்" என்றார்.
குலாம் நபி ஆசாத் நம்பிக்கை:
கூட்டணி குறித்து அகிலேஷ் யாதவ் சூசகமாக தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், "காங்கிரஸ் - சமாஜ்வாதி கூட்டணி உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார். தொகுதி பங்கீடு ஆகியன குறித்து சமாஜ்வாதியுடன் ஆலோசிக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான பிரிவுக்கு சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 11-ம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளது. ஆளும் சமாஜ்வாதியின் நிறுவனர் முலாயம் சிங்கிற்கும் அவரது மகனும் மாநில முதல்வருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையே வேட்பாளர் தேர்வில் மோதல் ஏற்பட்டது.
இருதரப்பினரும் கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். கடந்த 13-ம் தேதி இருபிரிவினரும் தேர்தல் ஆணையம் முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
மொத்தமுள்ள 229 எம்எல்ஏக் களில் 200 பேரும், எம்பிக் களில் பெரும்பான்மையினரும் அகிலேஷுக்கு ஆதரவு அளித்தனர். அதன் அடிப்படையில் சைக்கிள் சின்னம் அகிலேஷ் தரப்புக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. சமாஜ்வாதி மாநாட்டில் கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் தேர்வு செய்யப்பட்டதையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT