Published : 07 Sep 2016 04:43 PM
Last Updated : 07 Sep 2016 04:43 PM
இந்தியாவின் கடலோர கண்காணிப்பை வலுப்படுத்தும் வகையில் 22 அதிநவீன ஆளில்லா பாதுகாப்பு விமானங்களை விற்க அமெரிக்கா முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் கடலோர கண்காணிப்பை வலுப்படுத்த, 22 அதிநவீன ஆளில்லா பாதுகாப்பு விமானங்களை கொள்முதல் செய்வதற்கு விருப்பம் தெரிவித்து, இந்திய கடற்படை சார்பில் கடந்த பிப்ரவரியில் அதிகாரபூர்வமான கோரிக்கை கடிதம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரம் குறித்து அதிபர் ஒபாமாவிடம் பேசினார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் முக்கிய ராணுவ பங்குதாரராக இந்தியாவை நியமிப்பதாக ஒபாமா அறிவித்தார்.
எனினும் கடலோர பாதுகாப்புக்காக 22 அதிநவீன விமானங்களை இந்தியாவுக்கு விற்பது குறித்து அமெரிக்கா இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அதேசமயம், இந்தியாவின் வேண்டுகோளை நிறைவேற்ற சர்வதேச முகமை மூலம் அதற்கான நடவடிக்கையை அமெரிக்கா விரைவில் எடுக்கும் என நம்பப்படுகிறது.
வரும் ஜனவரி மாதத்துடன் அதிபர் பதவியில் இருந்து ஒபாமா ஓய்வுபெறவிருப்பதால் அதற்குள் இந்தியாவுக்கு ஆளில்லா விமானங்களை விற்பனை செய்வதற்கான உடன்பாட்டை இறுதி செய்ய ஒபாமா நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக அமெரிக்க எம்பிக்களின் ஒப்புதலை விரைவாக பெறவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் அமெரிக்கா சென்ற ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சர் ஆஷ்டன் கார்டரை சந்தித்து ஆளில்லா விமான கொள்முதல் தொடர்பாக விரிவாக விவாதித்துள்ளார். அப்போது இந்தியாவின் தேவையை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் உரிய முறையில் எடுக்கப்படும் என கார்டர் வாக்குறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT