Published : 20 Mar 2014 02:03 PM
Last Updated : 20 Mar 2014 02:03 PM
மும்பையில் உள்ள சக்தி மில்ஸ் வளாகத்தில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் 5 பேரை குற்றவாளிகள் என மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை விவரங்களை இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவிப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார்.
2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி செய்தி சேகரிப்பதற்காக மத்திய மும்பையில் உள்ள பாழடைந்த சக்தி மில்ஸ் வளாகத்துக்கு சக ஆண் ஊழியர் ஒருவருடன் 22 வயது பெண் பத்திரிகையாளர் ஒருவர் சென்றார். ஆண் ஊழியரை தாக்கிய 5 பேர் கொண்ட கும்பல், பெண் பத்திரிகையாளரை பாலியல் பலாத்காரம் செய்தது.
இந்த வழக்கில் விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி, சலிம் அன்சாரி, சிராஜ் ரெஹ்மான் மற்றும் ஒரு சிறுவனும் கைது செய்யப்பட்டனர்.
டெலிபோன் ஆபரேட்டராக பணிபுரிந்த 18 வயது பெண்ணை, அதே வளாகத்தில் 2013-ம் ஆண்டு ஜூலை மாதம், 5 பேர் கொண்ட கும்பல் (இதில் 3 பேர் பெண் பத்திரிகையாளர் வழக்கில் தொடர்புடையவர்கள்) பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த வழக்கில் விஜய் ஜாதவ், காசிம் பெங்காலி, சலிம் அன்சாரி, அஸ்பாக் ஷேக் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டனர்.
இந்த இரு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 சிறுவர்கள் மீதான விசாரணை, சிறுவர் நீதிமன்றத்தில் தனியாக நடைபெற்று வருகிறது. மற்ற 5 பேர் மீதான வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 5 பேரையும் குற்றவாளிகள் என்று நீதிபதி ஷாலினி பன்சால்கர் ஜோஷி அறிவித்தார்.
அவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரங்களை மார்ச் 21-ம் தேதி (இன்று) வெளியிடுவதாக நீதிபதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT