Last Updated : 05 Feb, 2014 12:00 AM

 

Published : 05 Feb 2014 12:00 AM
Last Updated : 05 Feb 2014 12:00 AM

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதா மனு தள்ளுபடி

தமிழக‌ முதல்வர் ஜெயலலிதாவின் 1,116 கிலோ வெள்ளிப் பொருள்களை வைத்திருக்கும் வி.பாஸ்கரன் இறந்து 2 மாதங்கள் ஆகிவிட்டது. அந்த விவரத்தை மறைத்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் அவர் மீது மனு தாக்கல் செய்திருக்கிறார். வழக்கை இழுத்தடிக்கும் நோக் கத்தில் ஜெயலலிதாவிற்கு ஆதர வாக அரசு வழக்கறிஞர் பவானி சிங் செயல்படுகிறார் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை புதிய ஆட்சேப மனுவை தாக்கல் செய்தார்.

இதற்கு 'தி இந்து' நாளிதழை அவர் ஆதாரமாக காட்டியதால் வ‌ழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நால்வரும் ஆஜராகவில்லை.

மனு தள்ளுபடி

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் தன்னிடமிருந்து கைப்பற்றிய 144 நினைவு பரிசுப் பொருட்களை திரும்பவும் ஒப்படைக்க வேண்டும் என கடந்த 27-ம் தேதி ஜெயலலிதா மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனு குறித்து நீதிபதி செவ்வாய்க்கிழமை வழங்கிய தீர்ப்பில் கூறியதாவது: “நீண்ட காலமாக நடைபெற்றுவரும் இவ்வழக்கில் இரு தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிந்து விட்டது. குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரிடமும் விசாரணை நடை பெற்று, விளக்கமும் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் நடந்திருக்கும் ஒரே மாற்றம், புதிய நீதிபதி பொறுப்பேற்றதுதான். இது போன்ற புதிய மனுக்களை வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் மீண்டும் தாக்கல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே நினைவுப் பொருள்கள் தொடர்பாக ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்கிறேன். அதே நேரத்தில் இவ்வழக்கின் தீர்ப்பிற்கு பிறகு, நினைவுப் பரிசு பொருள்கள் மீதான தனது உரி மையை ஜெயலலிதா சட்டப்படி நிலைநாட்டலாம்'' என்றார்.

புதிய ஆட்சேப மனு

‘ஜெயலலிதாவின் ஆலோசகர் வி.பாஸ்கரனிடம் இருக்கும் ஜெயலலிதாவிற்கு சொந்தமான 1,116 கிலோ வெள்ளிப் பொருள்களை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஒப்படைக்க வேண்டும்' என்று அரசு வழக்கறிஞ‌ர் பவானி சிங் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது.

அப்போது திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞரும் தர்மபுரி எம்.பி.யுமான இரா.தாமரைசெல்வன் புதிய ஆட்சேப‌ மனுவை தாக்கல் செய்தார்.

அதில், “அரசு வழக்கறிஞர் திங்கள்கிழமை தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்படும் ஜெயலலிதாவின் ஆலோசகர் வி.பாஸ்கரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த டிசம்பர் 3-ம் தேதி இறந்துவிட்டார். இது குறித்த செய்தி ‘தி இந்து' (ஆங்கில நாளிதழ்) நாளிதழில் வெளியாகி யுள்ளது” எனக்கூறி நீதிபதிக்கும் வழக்கறிஞர்களுக்கும் இந்து நாளிதழில் வெளியான செய்தியின் நகலை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தாமரைச்செல்வன் பேசுகையில், “பாஸ்கரன் இறந்த சம்பவத்தை மறைத்து அரசு வழக்கறிஞர் பவானி சிங் புதிய மனுவை தாக்கல் செய்திருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வழக்கை இழுத் தடிக்கும் நோக்கத்தில் இம் மனுவை தாக்கல் செய்திருக் கிறார் என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

அரசு வழக்கறிஞரும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரும் கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை இவ்வழக்கில் நீதிபதி எம்.எஸ்.பாலகிருஷ்ணா முன்னிலையில் இறுதி வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரன் உயிருடன் இருந்தார். ஆனால் அப்போது அரசு வழக்கறிஞர் இது போன்ற மனுவை தாக்கல் செய்யவில்லையே ஏன்? எனவே, அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்'' என வாதிட்டார்.

அதிர்ந்த அரசு வழக்கறிஞர்

‘பாஸ்கரன் இறந்து 2 மாதங்கள் ஆகிவிட்டது என அன்பழகனின் வழக்கறிஞரின் வாதத்தை கேட்ட அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் களும் அதிர்ச்சி அடைந்தன‌ர். நீதிபதி டி'குன்ஹா இது குறித்து அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

அப்போது, ‘எனக்கு இதுபற்றி விவரம் தெரியாது. விசாரித்து சொல்கிறேன்' என பவானி சிங் பதிலளித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி டி'குன்ஹா, ‘அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும் ஜெயலலிதாவின் வழக்கறிஞர் மணி சங்கரும் இவ்வழக்கின் மூன்றாம் தரப்பான அன்பழகன் தாக்கல் செய்த ஆட்சேபணை மனுவிற்கு பிப்ரவரி 6-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

இன்று விசாரணை

கடந்த 31-ம் தேதி மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் சார்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சண்முகம் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெற இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x